எனது செல்​போன் அழைப்​பு​களும் ஒட்​டு​ கேட்கப்படுகின்றன: சீமான் குற்​றச்​சாட்டு

சென்னை: தனது செல்போன் உரையாடல்கள் திமுக அரசால் ஒட்டுக் கேட்கப்படுவதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியிருந்த நிலையில் என்னுடைய தொலைப்பேசி அழைப்புகளும் தான் ஒட்டுக் கேட்கப்படுகின்றன என நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: பாமகவில் ராமதாஸ் – அன்புமணி, மதிமுகவில் வைகோ – துரை வைகோ என அக்கட்சிகளில் நடைபெற்று வரும் பிரச்சினைகளால் நாட்டுக்கும், மக்களுக்கும் பிரச்சினை இல்லை. எந்தக் கட்சியில் தான் பிரச்சினை இல்லாமல் இருக்கிறது. அது அவர்களது கட்சி பிரச்சினை. அவர்களே பேசி சரி செய்து கொள்வார்கள். இதைப்பற்றி நாம் பேசுவது பண்பாடற்ற செயலாகும்.

பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், தனது செல்போன் உரையாடல்களை எல்லாம் திமுக அரசால் ஒட்டுக் கேட்கப்படுவதாக சொல்லியிருக்கிறார். என்னுடைய செல்போன் உரையாடல்கள் 20 ஆண்டுகளாக ஒட்டுக் கேட்கப்படுகின்றன. இந்திய அளவில் ஒட்டுக்கேட்கப்படும் 50 தலைவர்களில் நானும் ஒருவன். இது அநாகரீகமானது. இந்நாட்டில் தனி மனித சுதந்திரம் என்பது இல்லை.

நீட் தேர்வால் உயிரிழந்தவர்களுக்கு அதிமுக சார்பில் கண்ணீர் அஞ்சலி போராட்டம் நடத்தியுள்ளனர். தேர்தல் திருவிழா வரும்போது இதுபோன்ற நாடகங்கள் நடப்பது தான். திமுக ஆட்சியில் ஒரு லட்சம் போராட்டங்களுக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளதாக பெருமையுடன் சொல்கிறார் முதல்வர். இதில் என்ன பெருமை இருக்கிறது. இதன்மூலம் ஒரு லட்சம் பிரச்சினைகளை மக்களுக்கு தந்திருக்கின்றனர்.

பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதை எதிர்த்து, ஆயிரமாவது நாள் போராட்டத்தில் மக்கள் ஈடுபட்டுள்ளனர். அங்கு விமான நிலையம் கட்ட முடியாது. கட்டவிட மாட்டேன். இவ்வாறு அவர் கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.