ரெயில் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயன்ற நபரை காப்பாற்ற சென்ற மகள், உறவினர்: மூவரும் உயிரிழந்த சோகம்

ஜெய்ப்பூர்,

ராஜஸ்தான் மாநிலத்தில் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொள்ள முயன்ற நபரை காப்பாற்ற சென்ற மகள், உறவினர் உட்பட மூவரும் ரெயில் மோதி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜெய் அம்பே நகரில் வசிப்பவர் சுமித் சைன் (40 வயது). குடும்ப தகராறு காரணமாக மனமுடைந்த சுமித் நேற்று ஜகத்புரா பகுதியில் சிபிஐ கேட் கிராசிங் அருகே உள்ள ரெயில் தண்டவாளத்தில் தற்கொலை செய்து கொள்ளும் நோக்கத்தில் சென்று அமர்ந்தார். அங்கு வைத்து தனது உறவினருக்கு வீடியோ கால் செய்த சுமித், ரெயில் தண்டவாளத்தில் இருப்பதாகவும், ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொள்ளப் போவதாகவும் கூறியுள்ளார்.

அவர் உடனடியாக இதுகுறித்து சுமித்தின் மகள் நிஷா (15 வயது) மற்றும் அவரது சகோதரர் கணேஷ் சைன் (44 வயது) ஆகியோரை தொடர்பு கொண்டு கூறியுள்ளார். இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற நிஷா, கணேஷ் இருவரும் சுமித்தை சமாதானப்படுத்த முயன்றனர். அவரை தண்டவாளத்தில் இருந்து இழுக்க முயன்றபோது, அங்கு வேகமாக வந்த ஹரித்வார் ரெயில் மூன்று பேர் மீதும் மோதியது. இதில் அவர்கள் மூவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் குறித்து ஹரித்வார் மெயிலின் லோகோ பைலட் உடனடியாக ரெயில்வே கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் அவர்களது உடல்களை மீட்டு, ஜெய்புரியா மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவ இடத்தில் இருந்து கண்டெடுத்த உடைந்த மொபைல் போன் மூலம் அவர்களது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர்.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.