காத்தோலிக்க கிறிஸ்துவ மதத்தலைவரான போப் பிரான்சிஸ் நேற்று காலமானார். அவரது மறைவுக்கு உலகம் முழுவதும் உள்ள அரசியல் கட்சி தலைவர்கள், மத தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். போப் பிரான்சிஸ் மறைவை தொடர்ந்து புதிய போப் தேர்வுக்கான நடைமுறைகள் தொடங்க உள்ளன. புதிய போப் தேர்வில் 80 வயதுக்கு குறைவான கார்டினல்கள் வாடிகனில் கூடி தேர்வு நடைமுறைகளை செய்ய உள்ளனர். இந்த தேர்வுக்குழுவில் இந்திய கார்டினல்கள் 4 பேரும் இடம் பெற்றுள்ளனர். அவர்களின் விவரம் வருமாறு;
பிலிப் நேரி பெராவ்:
72 வயதான இவர் கோவா,டாமன் பேராயர். இந்திய கத்தோலிக்க ஆயர்கள் மாநாடு, ஆசிய ஆயர்கள் மாநாடுகளின் கூட்டமைப்பு தலைவராக உள்ளார். புலம் பெயர்ந்து வந்தோரை ஆதரிப்பதற்கும், சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கும் நீண்ட கால பங்களிப்பை அளித்து வருகிறார்
பசேலியாஸ் கிளிமீஸ் : இவரது இயற்பெயர் ஐசக் தொட்டும்கல்; 64 வயதான இவர் கேரள மாநில திருவனந்தபுரத்தை ஸ்தலமாக கொண்ட சைரோ மலங்கரா கத்தோலிக்க திருச்சபை பேராயர். இந்த திருச்சபையின் ஆயராக பல ஆண்டுகளாக நீடித்து வருகிறார். 2001 ஆம் ஆண்டு பிஷப்பான அவர், 2012-ல் கார்டினலானார்.
ஆண்டணி போலா:ஐதாராபாத்தை சேர்ந்த பேராயரான இவரின் வயது 63.இந்தியாவின் முதல் தலித் கார்டினல் என்ற வரலாற்றை படைத்தவர். அவரது நியமனம் திருச்சபையில் ஒரு சமத்துவத்தை உணர்த்துவதாக கருதப்படுகிறது
ஜார்ஜ் ஜேக்கப் கூவக்காடு: இந்தியாவின் 4 கார்டினல்களில் இவர்தான் மிகவும் இளையவர். இவரின் வயது 51 ஆகும். உலகம் முழுவதும் பல்வேறு மதங்கள் இடையே புரிதலை ஏற்படுத்த வேண்டும் என்பதில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவர்.