புதுடெல்லி,
ஜம்மு காஷ்மீரின் முக்கிய சுற்றுலாத் தலமான பஹல்காம் என்ற இடத்தில் ரிசார்ட் பகுதி அருகே நேற்று பயங்கரவாதிகள் சுற்றுலாப் பயணிகளைக் குறி வைத்து திடீர் தாக்குதல் நடத்தினார்கள். இந்த தாக்குதலில் 2 வெளிநாட்டவர் உட்பட 26 சுற்றுலாப்பயணிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த கொடிய தாக்குதலை தொடர்ந்து பயங்கரவாதிகளை பிடிக்க ராணுவத்தினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமைச்சரவைக் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. டெல்லியில் பிரதமர் மோடி இல்லத்தில் நடக்கும் இக்கூட்டத்தில் அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித்ஷா, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், பாதுகாப்பு செயலாளர், முப்படை தளபதிகள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளை திரும்பப்பெறுவது தொடர்பாக வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் மற்றும் அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரிகளை திருப்பி அனுப்பவும் ஆலோசிக்கப்படுவதாக கூறப்படுகிறது.