வாஷிங்டன்,
கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவரான போப் பிரான்சிஸ் (வயது 88) கடந்த 21ம் தேதி காலமானார். வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக அவர் உயிரிழந்தார்.
போப் பிரான்சிஸ் மறைவுக்கு உலகத்தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவரின் இறுதிச்சடங்கு 26ம் தேதி(சனிக்கிழமை) நடைபெற உள்ளது. இத்தாலியின் ரோம் நகரில் உள்ள புனித பீட்டர் தேவாலயத்தில் போப் பிரான்சிஸ் உடல் வைக்கப்பட்டு இறுதிச்சடங்கு நடைபெறுகிறது. அதன்பின்னர், உலக நாடுகள் தலைவர்கள், பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கபப்ட்டு புனித மேரி மேஜர் பசிலிக்கா பேராலயத்தில் அடக்கம் செய்யப்படுகிறது.
இந்நிலையில், போப் பிரான்சிஸ் இறுதிச்சடங்கில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பங்கேற்கிறார். இதற்காக அவர் வெள்ளிக்கிழமை காலை தனிவிமானம் மூலம் இத்தாலியின் ரோம் நகருக்கு செல்கிறார். அதன்பின்னர், சனிக்கிழமை நடைபெற உள்ள போப் பிரான்சிஸ் இறுதிச்சடங்கில் டொனால்டு டிரம்ப் பங்கேற்கிறார். இறுதிச்சடங்கிற்குப்பின் சனிக்கிழமை மாலை அவர் அமெரிக்கா திரும்புகிறார்.