''மதத்தின் பெயரால் நடக்கும் பயங்கரவாதம் மனிதகுலத்துக்கு விரோதமானது'' – பஹல்காம் தாக்குதலுக்கு இந்து முன்னணி கண்டனம்

சென்னை: மதத்தின் பெயரால் நடக்கும் பயங்கரவாதம் மனிதகுல விரோதம், மனித தன்மை அற்றது என்பதை இந்த சம்பவம் வெளிப்படுத்துகிறது என காஷ்மீர் தாக்குதலுக்கு இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நேற்று காஷ்மீர் மாநிலத்தில் இஸ்லாமிய மத அடிப்படைவாத பயங்கரவாதிகள் இந்திய இராணுவ உடையில் வந்து அப்பாவி சுற்றுலா பயணிகள் 27 பேரை ஈவிரக்கமின்றி படுகொலை செய்துள்ளனர். அதிலும் கொடுமையானது அவர்களின் மதத்தை கேட்டு, உடைகளை களைந்து உடல் உறுப்புகளை பார்த்து உறுதி செய்த பிறகு கொன்றுள்ளனர்.

மனைவி கண் முன்பே கணவனை கொன்றுள்ளனர். மனைவி தன்னையும் கொன்று விடுங்கள் என கூறியதற்கு, இதனை இந்திய பிரதமர் மோடிக்கு தெரிவிக்க வேண்டும் ஆகவே கொல்லாமல் விடுவதாக பயங்கவாதிகள் கூறியுள்ளனர். இந்த கொலை பாதக சம்பவம் ஒட்டுமொத்த இந்திய நாட்டையும் உலுக்கியுள்ளது. மத பயங்கரவாதம் எத்தகைய அபாயகரமானது என உலகத்திற்கு உணர்த்தியுள்ளது. மதத்தின் பெயரால் நடக்கும் பயங்கரவாதம் மனிதகுல விரோதம் மனித தன்மை அற்றது என்பதை இந்த சம்பவம் வெளிப்படுத்துகிறது.

கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக காஷ்மீரில் தொடர்ந்து பயங்கரவாதம் தலைவிரித்தாடியது. பயங்கரவாதத்தை ஒடுக்க முடியாமல் இருந்ததற்கு முக்கிய காரணமாக இருந்தது அந்த மாநிலத்திற்கு அளிக்கப்பட்ட சட்டப்பிரிவு 370 சலுகை. அதனை நீக்கி மாநிலத்தை மூன்று பிரிவாக பிரித்து குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்தப்பட்டது. அதன் பிறகு தான் காஷ்மீரில் பயங்கரவாதிகளின் கொட்டம் ஒடுக்கப்பட்டது. அங்கு அமைதி திரும்பியது. காஷ்மீர் மக்கள் மகிழ்ச்சியுடன் அமைதியுடன் வாழ ஆரம்பித்தனர்.

மேலும் அங்கு விவசாயம், சுற்றுலா மூலம் மக்கள் வளர்ச்சியின் அவசியத்தை உணரத் தொடங்கினர். மேலும் பாரதம் முழுவதிலிருந்தும், உலக மக்களும் காஷ்மீருக்கு சுற்றுலா வரத் துவங்கினர். இதனை பொறுக்க முடியாத பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் இந்த கோழைத்தனமான மத பயங்கரவாத கொடூரத்தை நடத்தியுள்ளனர்.

நமது நாட்டின் துரதிருஷ்டம் மக்கள் பயங்கரவாதத்தின் பிடியில் இருந்து முழுவதுமாக அச்சமின்றி வெளிவரும் முன்னரே தேர்தலை நடத்த நீதிமன்றம் தலையிட்டது. எதிர்க்கட்சிகளும் அங்கு அமைதி திரும்பும் முன் தேர்தல் நடத்த வேண்டும் என்று வலியுறுத்த ஆரம்பித்தன. குடியரசு தலைவர் ஆட்சி இன்னும் கொஞ்ச நாட்கள் நீடித்து இருந்தால் இத்தகைய கொடூரம் நடந்து இருக்காது.

ஆனால் எல்லாவற்றையும் அரசியலாக்கும் போக்குதான் இத்தகைய அக்கிரமக்காரர்களுக்கு உதவுவதாக அமைகிறது என்பதை சுட்டிக் காட்டுகிறோம். காஷ்மீர் மக்கள் இப்போது பயங்கரவாதத்திற்கு எதிராக போராட ஆரம்பித்துள்ளனர். உண்மையில் இது நல்ல துவக்கம் என்றாலும் கண் எதிரே பயங்கரவாதிகளின் அச்சுறுத்தலை பார்த்து மீண்டும் அந்த மக்கள் நம்பிக்கை இழந்து விடக்கூடாது என்பது நமது கவலை.

பாரதத்தின் காஷ்மீர் எல்லை பகுதியான புல்வாமாவில் ராணுவ உடையில் வந்து ராணுவ முகாம் மீது பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுத்ததுபோல இப்போதும் பயங்கரவாதிகளை ஒட்டுமொத்தமாக ஒழிக்க ராணுவத்திற்கு இந்தியர்கள் ஒவ்வொருவரும் துணை நிற்போம். இப்போது தருகின்ற பதிலடி இனி எந்த காலத்திலும் பயங்கரவாதிகள் இந்திய மண்ணில் எந்த பயங்கர செயலையும் செய்ய அஞ்சும் அளவு இருக்க வேண்டும்.

உலக நாடுகள் அனைத்தும் கூட இஸ்லாமிய அடிப்படைவாத பயங்கரவாதத்தை ஒழிக்க பாரததத்திற்கு துணை நிற்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கேட்டுக்கொள்கிறோம். இஸ்லாமிய அடிப்படைவாத பயங்கரவாதிகளின் இரக்கமற்ற கொடிய தாக்குதலில் உயிரிழந்த அப்பாவி மக்களின் ஆன்மா நற்கதி அடைய பிரார்த்திக்கிறோம்.

நாம் நமது உறவினர்களை இழந்துள்ளோம். எனவே அருகில் உள்ள கோயிலில் மோட்ச தீபம் ஏற்றி பலிதானிகள் ஆன்மாவிற்கு வேண்டுதல் வைப்போம் .அத்துடன் பயங்கரவாதம் முற்றிலும் ஒழித்திட சபதம் ஏற்க இந்து முன்னணி சார்பில் வேண்டுகோள் விடுக்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.