புதுடெல்லி: பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தின் தொடர்ச்சியாக, ஜம்மு – காஷ்மீரின் குல்காம் பகுதியில் பயங்கராவதிகளுடன் புதன்கிழமை மாலை தொடங்கி பாதுகாப்பு படையினர் சண்டையிட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதேவேளையில், பிரதமர் மோடியின் இல்லத்தில் உயர் மட்ட ஆலோசனைக் கூட்டம் நடந்து வருகிறது.
ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தின் பஹல்காம் மலைப் பகுதியில் ராணுவ சீருடையில் இருந்த பயங்கரவாதிகள் செவ்வாய்க்கிழமை துப்பாக்கியால் சுட்டதில் 26 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்தனர். இதையடுத்து, பயங்கரவாதிகளை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இரு பயங்கரவாதிகள் ஊடுருவியதாக தகவல் கிடைத்ததன் தொடர்ச்சியாக, குல்காம் பகுதியில் புதன்கிழமை மாலை தொடங்கி தீவிரமான துப்பாக்கிச் சண்டை நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மறுப்பக்கம், டெல்லியில் பிரதமர் மோடியின் இல்லத்தில் உயர் மட்ட ஆலோசனைக் கூட்டம் நடந்து வருகிறது. இதில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
பதிலடி உறுதி: ராஜ்நாத் சிங் – முன்னதாக, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசும்போது, “பயங்கரவாதத்தை எந்த வகையிலும் சகித்துக்கொள்ள முடியாது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும். இந்தியா ஒரு பழமை வாய்ந்த நாகரிகம் கொண்ட மிகப் பெரிய ஜனநாயக நாடு . இதுபோன்ற எந்தவொரு பயங்கரவாத நடவடிக்கைகளையும் ஒருபோதும் சகித்துக்கொள்ளாது.
இந்தக் கோழைத்தனமான செயலுக்கு எதிராக நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகனும் ஒன்றிணைந்து நிற்கின்றனர். பயங்கரவாத தாக்குதலை நடத்தியவர்கள் மட்டுமின்றி, இந்திய மண்ணில் இதுபோன்ற மோசமான செயல்களை திரைக்குப் பின்னால் இருந்து சதி செய்தவர்களுக்கும் விரைவில் உரிய பதிலடி கிடைக்கும். எல்லை தாண்டிய பயங்கரவாத செயல்களின் விளைவாக நாடுகள் செயலிழந்து போனதற்கு வரலாறு சாட்சியாக உள்ளது.
மதத்தை குறிவைத்து பயங்கரவாதிகள் நடத்திய கோழைத்தனமான தாக்குதலில் பல அப்பாவி மக்களை நாடு இழந்துள்ளது. இது மிகவும் மனிதாபிமானமற்ற செயல். இச்சம்பவம் அனைவரையும் ஆழ்ந்த மனவேதனையில் ஆழ்த்தியுள்ளது. இந்த துயரமான தருணத்தில், உயிரிழந்தவர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.” என்றார்.
நிலவரம் என்ன? – ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தின் பஹல்காம் மலைப் பகுதியில் ராணுவ சீருடையில் இருந்த பயங்கரவாதிகள் செவ்வாய்க்கிழமை துப்பாக்கியால் சுட்டதில் 26 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த பாதுகாப்புப் படையினர் சம்பவ இடத்துக்குச் சென்று தப்பி ஓடிய பயங்கரவாதிகளை தேடி வருகின்றனர்.
இதனிடையே, இந்தத் தாக்குதலில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் ஆதில் குரீ, ஆசிப் ஷேக், சுலேமான் ஷா மற்றும் அபு தல்ஹா ஆகிய 4 பயங்கரவாதிகளின் புகைப்படங்களை பாதுகாப்புத் துறை வெளியிட்டது. இதில் ஆதில் குரீ அனந்த்நாக் நகரையும் ஆசிப் ஷேக் சோபூர் நகரையும் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. சந்தேகத்துக்குரிய பயங்கரவாதிகளின் வரைபடங்களை விசாரணை அமைப்புகள் வெளியிட்ட சில மணி நேரங்களில் இந்தப் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.
ராணுவ சீருடை அணிந்திருந்த 6 வெளிநாட்டு பயங்கரவாதிகள், சுற்றுலாப் பயணிகளை சுற்றி வளைத்து அவர்களின் பெயர் மற்றும் மதம் பற்றிய விவரங்களை கேட்டதாக உயிர் தப்பியவர்கள் தெரிவித்துள்ளனர். அப்போது முஸ்லிம் அல்லாதவர்களை மட்டுமே குறிவைத்து துப்பாக்கியால் சுட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர். அதேநேரம் முஸ்லிம் என தெரிவித்தவர்களிடம் குரானை ஓதுமாறு கேட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.