‘மும்பையின் கம்பேக்!’
சன்ரைசர்ஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றிருக்கிறது மும்பை இந்தியன்ஸ் அணி. தொடர்ச்சியாக அந்த அணி பெறும் நான்காவது வெற்றி இது. இந்த வெற்றியின் மூலம் புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்திற்கு மும்பை இந்தியன்ஸ் அணி முன்னேறியிருக்கிறது.

மும்பை இந்தியன்ஸ் அணி சீசனின் தொடக்கத்தில் கடுமையாகத் தடுமாறிக் கொண்டிருந்தது. புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்திலெல்லாம் இருந்தது. அப்படியிருந்த அணி இப்போது மூன்றாவது இடத்துக்கு முன்னேறியிருப்பதற்கு ரோஹித் சர்மாவின் பார்மும் முக்கிய காரணம்.

ஏனெனில், கடந்த இரண்டு போட்டிகளில் அவர் ஆடிய ஆட்டம்தான் மும்பைக்கு அதிகப்படியான ரன்ரேட்டை சம்பாதித்துக் கொடுத்தது.
‘பார்முக்கு திரும்பிய ரோஹித்!’
சென்னைக்கு எதிரான கடந்த போட்டியிலும் ரோஹித் சர்மா அரைசதத்தை கடந்து சிறப்பாக ஆடியிருந்தார். ஆட்டநாயகன் விருதையும் வென்றிருந்தார். அந்தப் போட்டியின் போது பேசிய ஹர்திக் பாண்ட்யா, ‘ரோஹித் சர்மாவின் பார்ம் பற்றி நாங்கள் கவலையே கொள்ளவில்லை. ஏனெனில், அவர் பார்முக்கு வந்துவிட்டால் எந்த அணியாலும் அவரை கட்டுப்படுத்த முடியாது என்பது எங்களுக்குத் தெரியும்.’ என்றார்.
ஹர்திக்கின் வார்த்தைகள் மிகையற்றவை. இந்த சீசனை ரோஹித் நன்றாகத் தொடங்கியிருக்கவில்லை. தொடர்ச்சியாக மிகக்குறைந்த ஸ்கோர்களை மட்டுமே எடுத்திருந்தார். பவர்ப்ளேயை கூட தாண்டாமல்தான் அவுட் ஆகிக்கொண்டிருந்தார். ஆனாலும் ரோஹித் தடுமாறி திணறி அவுட் ஆகிறார் என எங்கேயுமே சொல்ல முடியவில்லை.

ஏனெனில், ஒவ்வொரு போட்டியிலும் ஒவ்வொரு விதத்தில் ரோஹித் அவுட் ஆகியிருந்தார். அவர் ஆட நினைக்கும் விதம்தான் பிரச்சனையாக இருந்தது. ‘நீங்க செஞ்சுரி அடிச்சு டீம் தோத்தா அதுல எந்த அர்த்தமும் இல்ல.. ‘ சமீபத்தில் ஒரு பட்டியில் ரோஹித் இப்படி பேசியிருந்தார். இதுதான் ரோஹித்தின் பாலிசி.
பெரிய இன்னிங்ஸ்களை விட அணியின் வெற்றியில் தாக்கத்தை ஏற்படுத்தும் அதிரடி இன்னிங்ஸ்களையே அவர் விரும்பினார். அதனால்தான் அதிக ரிஸ்க் எடுத்து பெரிய பெரிய ஷாட்களை ஆடினார். அவரைப் பொறுத்தவரைக்கும் பவர்ப்ளேக்குள்ளேயே அவர் ஆடி முடித்துவிட்டால் போதும் என்றே நினைத்தார்.

அந்த பவர்ப்ளேக்குள் எவ்வளவு அதிக ரன்களை சேகரிக்க முடியும் என்பதுதான் ரோஹித்தின் குறியாக இருந்து. ஆனால், இந்த அணுகுமுறை நடப்பு சீசனில் அவருக்கு பெரிதாகக் கைகொடுக்கவில்லை. அதிரடி ஆட்டத்துக்கும் பெரிய இன்னிங்ஸ்களுக்கும் இடையில் ஒரு சமநிலை கோட்டை கண்டறிய வேண்டிய தேவை ரோஹித்துக்கு ஏற்பட்டது. அந்த கோட்டை கடந்த போட்டியிலிருந்து ரோஹித் சரியாகப் பிடித்துவிட்டார்.
‘ரோஹித்தின் வியூகம்!’
சன்ரைசர்ஸூக்கு எதிரான இந்தப் போட்டியில் 46 பந்துகளுக்கு 70 ரன்களை ரோஹித் எடுத்திருந்தார். இந்தப் போட்டியில் அவரிடம் வழக்கத்தை விட கொஞ்சம் நிதானம் இருந்திருக்கும். அதேநேரத்தில், அதிரடி இல்லை என எடுத்துக்கொள்ள முடியாது
மேத்யூ ஹேடன் ரோஹித் இன்றைக்கு ஆடிய ஆட்டத்தை ‘Well Measured Innings’ என வர்ணித்திருந்தார். அதாவது, அதிரடியாக ஆட வேண்டும். ஆனால், எந்தளவுக்கு அதிரடியாக வேண்டும் என்கிற வரையறை ரோஹித்திடம் இருந்தது. இந்த இன்னிங்ஸில் 8 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்சர்களை ரோஹித் அடித்திருந்தார். பேட் கம்மின்ஸ் வீசிய 3 வது ஓவரிலிருந்து ரோஹித் பவுண்டரிக்களை அடிக்க ஆரம்பித்தார்.

அந்த ஓவரில் ஒரு சிக்சரையும் ஒரு பவுண்டரியையும் தொடர்ந்து அடித்துவிட்டு அடுத்த பந்தை சிங்கிள் தட்டியிருப்பார். ரோஹித்தின் வழக்கமான அணுகுமுறைப்படி பார்த்தால் அந்த ஓவரில் ரோஹித் மேலும் சில பவுண்டரிக்களுக்கு சென்றிருக்க வேண்டும். ஆனால், ரோஹித் அதை தவிர்த்தார். பவுண்டரி அடித்து விட்டு நிதானமாக சிங்கிள் தட்டினார். இந்த இன்னிங்ஸ் முழுவதையுமே இப்படித்தான் ஆடினார்.
ஒரு பவுண்டரியை அடித்து விட்டு சிங்கிள் தட்டிவிடுவார் அல்லது தொடர்ந்து இரண்டு பவுண்டரிக்களை அடித்துவிட்டு சிங்கிள் தட்டினார். தொடர்ச்சியாக மூன்று பவுண்டரிக்களை ரோஹித் அடிக்கவே இல்லை. இதுதான் ஹேடன் சொன்ன ‘Measured Innings’. பவுண்டரிக்கு பிறகு சிங்கிள் தட்டும் நிதானம்தான் ரோஹித்தை பெரிய இன்னிங்ஸ் ஆட வைத்தது.

‘மும்பையின் எழுச்சியும்; ரோஹித்தின் கம்பேக்கும்!’
கடந்தப் போட்டியில் மும்பை அணி 8 விக்கெட் வித்தியாசத்திலும் இந்தப் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்திலும் வென்றிருக்கிறது. ஆக, டாப் ஆர்டரில் ரோஹித் சிறப்பாக ஆடும்போது மும்பையின் மிடில் ஆர்டருக்கு வேலையே இல்லாமல் போய் விடுகிறது. மேலும், மும்பை அணி போட்டிகளையும் நிறைய ஓவர்களை மீதம் வைத்து வெல்கிறது. அதற்கும் ரோஹித்தின் பெர்பார்ம்தான் காரணம்.

கடந்தப் போட்டியையும் சரி இந்தப் போட்டியையும் சரி மும்பை அணி 15.4 ஓவர்களிலேயே வென்றுவிட்டது. அதனால்தான் மும்பையின் ரன்ரேட் எகிறி இப்போது மூன்றாவது இடத்துக்கு முன்னேறியிருக்கிறது.

ரோஹித் ஒரு ஜாம்பவான். அவரின் முழுமையான செயல்பாடு வெளிப்படும்பட்சத்தில் அது அந்த அணிக்கே பெரிய தெம்பை கொடுக்கும். மும்பை அணி மட்டும் சரியான சமயத்தில் Peak ஆகவில்லை. ரோஹித்துமே சரியான சமயத்தில் Peak ஆகியிருக்கிறார். மிரட்டல் ஹிட்மேன்!