காவிரி டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணை ஜூன் 12-ல் திறப்பு: அமைச்சர் துரைமுருகன் தகவல்

சென்னை: காவிரி வழித்தடங்கள், கால்வாய்கள், வடிகால்களில் தூர்வாரும் பணிகள் மே மாதத்துக்குள் முடிக்கப்பட்டு, மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12-ம் தேதி தண்ணீர் திறக்கப்படும் என்று சட்டப்பேரவையில் நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் நேற்று கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து நன்னிலம் எம்எல்ஏ ஆர்.காமராஜ் (அதிமுக) பேசும்போது, ‘‘நீர்நிலைகள் மற்றும் அதன் வழித்தடங்களில் ஆண்டுதோறும் மார்ச் முதல் மே மாதத்துக்குள் தூர்வாரும் பணிகளை முடிக்க வேண்டியது அவசியம்.

இந்த ஆண்டு கால்வாய்கள், வடிகால்கள் என 822 இடங்களில் தூர்வாரும் பணிகள் மேற்கொண்டு வரும் நிலையில், அதற்காக ஒதுக்கப்பட்ட நிதி போதுமானதாக இல்லை. மேட்டூர் அணை திறப்பதற்கு முன்பு இந்த பணிகளை செய்து முடிக்க வேண்டும்’’ என்றார்.

இதற்கு பதில் அளித்து நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் பேசும்போது, ‘‘காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த தொடர்மழையால் வடிகால், ஆறுகளில் மணல் திட்டு ஏற்பட்டுள்ளது. அவற்றை அகற்றி தண்ணீர் தடையின்றி செல்வதற்காக 5 ஆயிரம் கி.மீ தூரத்துக்கு தூர்வாரும் பணிகள் நடந்து வருகின்றன.

ரூ.98 கோடியில் நடைபெறும் இந்த பணிகளை கண்காணிக்க ஒவ்வொரு டெல்டா மாவட்டத்துக்கும் தனியாக மேற்பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அனைத்து தூர்வாரும் பணிகளும் மே மாதத்துக்குள் முடிக்கப்பட்டு ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படும்’’ என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.