சென்னை: தமிழக சட்டப்பேரவை தேர்தல் பணியை இன்றே தொடங்குங்கள் என்று அதிமுக மாவட்ட செயலாளர்களை கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார்.
அதிமுக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம், சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி தலைமையில், கட்சியின் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன், பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், துணைப் பொதுச்செயலாளர்கள் கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், தலைமை நிலைய செயலாளர் எஸ்.பி.வேலுமணி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பூத் கிளை நிர்வாகிகள் நியமன பணியில் உள்ள முன்னேற்றம் குறித்து மாவட்ட செயலாளர்களிடம் கேட்டறிந்தார். பின்னர் கூட்டத்தில் அவர் பேசியதாவது:
தமிழகம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளில் உள்ள 68,144 பூத்களுக்கும் தலா 3 மகளிர் உள்ளிட்ட தலா 9 நிர்வாகிகளை நியமிக்க வேண்டும் என்று கடந்த ஆண்டிலிருந்தே கூறி வருகிறேன். இப்பணியை வலுப்படுத்துவதற்காகவே கட்சி ரீதியிலான 88 மாவட்டங்களுக்கு பொறுப்பாளர்களை நியமித்தேன். மார்ச் 31-ம் தேதிக்குள் பணிகளை முடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தி இருந்தேன். இருப்பினும் நேற்று நடைபெற்ற மாவட்ட பொறுப்பாளர்கள் உடனான ஆலோசனைக் கூட்டத்தில் ஒரு மாவட்ட பொறுப்பாளர் கூட 100 சதவீதம் பணிகளை முடித்ததாக தெரிவிக்கவில்லை.

செங்கோட்டையனுக்கு முதல்வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டிருந்தது.
| படங்கள்: ம.பிரபு |
தேர்தலில் ஒரு கட்சியின் வெற்றிக்கு பூத் கிளை வலிமை முக்கியம். பூத் கிளை வலிமையாக இருந்தால்தான் அதிமுகவால் 2026-ல் ஆட்சியை பிடிக்க முடியும். அதனால் பணிகளில் அலட்சியமாக இருந்து உங்களை நீங்களே ஏமாற்றிக்கொள்ள வேண்டாம். வரும் தேர்தல் நமக்கு சாதகமாக உள்ளது. திமுக மீது மக்கள் மிகப்பெரிய அதிருப்தியில் இருக்கிறார்கள். அதிமுக கூட்டணியில் பாஜகவும் சேர்ந்துள்ளது. இன்னும் பல கட்சிகள் கூட்டணியில் சேர உள்ளன. நிச்சயம் அதிமுக தலைமையில் வலிமையான கூட்டணி அமையும்.
கடந்த தேர்தலில வெறும் 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தான் ஆட்சியை இழந்தோம். அதில் கவனம் செலுத்தினாலே ஆட்சியை பிடித்துவிடலாம். இதை மனதில் வைத்து, மாவட்ட செயலாளர்கள் உற்சாகமாக பணியாற்ற வேண்டும். இன்று முதலே உங்கள் தொகுதிகளில் கட்சி பணியை தேர்தல் பணியாக மேற்கொள்ள வேண்டும். பூத் கிளை நிர்வாகிகள் நியமனத்தை மே 15-ம் தேதிக்குள் முடிக்க வேண்டும். இவ்வாறு பழனிசாமி பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.