டோக்கியோ,
ஜப்பான் தலைநகர் டோக்கியோவை சேர்ந்த 56 வயதான நோபுஹிகோ சுசுகி என்பவர், சீன உணவகம் ஒன்றை நடத்தி வருகிறார். கடந்த ஒரு வாரமாக இவர் உணவகத்தை திறக்காமல் இருந்ததால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர், போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், அவரது வீட்டில் சோதனை நடத்தினர். அப்போது அவரது வீட்டு அலமாரியில், எலும்புக்கூடு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.
இதுதொடர்பாக அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கடந்த 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம், வேலை முடிந்து திரும்பியபோது தனது 86 வயதான தந்தை வீட்டில் இறந்து கிடந்தார், ஆனால் எப்படி இறந்தார் என்று தெரியவில்லை. அவருக்கு இறுதிச் சடங்குகள் செய்வதற்கு அதிகளவு செலவாகும் என்பதால், அதை தவிர்ப்பதற்காக தந்தையின் உடலை அலமாரியில் மறைத்து வைத்ததாக அவர் தெரிவித்தார். இதனைக் கேட்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.
ஜப்பானில், இறுதிச்சடங்கு செய்வதற்கு 1.3 மில்லியன் யென் (இந்திய மதிப்பில் ரூ7.60 லட்சம்) ஆகும் என கூறப்படுகிறது. இதன் காரணமாகவே அவர் தனது தந்தையின் உடலை மறைத்து வைத்திருந்ததாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து போலீசார் கூறுகையில், “ஆரம்பத்தில் இந்த செயல்களுக்காக அவர் குற்ற உணர்ச்சியுடன் இருந்ததாகவும், பின்னர், இந்த நிலைக்கு தனது தந்தையே காரணம் என்று நம்பி நிம்மதியடைந்ததாகவும்” தெரிவித்தனர்.
இந்நிலையில் தனது தந்தையின் ஓய்வூதியத்தை 2 ஆண்டுகளாக பெற்று வந்ததால், சந்தேகத்தின் அடிப்படையில் அவரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக அங்குள்ள சமூக ஊடகங்களில், இந்த வழக்கு எதிர்வினைகளைத் தூண்டியுள்ளது. 56 வயதான அவர் கூடுதல் ஓய்வூதியத்தை வசூலிக்க தனது தந்தையைக் கொன்றதாக சிலர் கூறினாலும், ஒரு சிலர் அவருக்கு அனுதாபம் தெரிவித்துள்ளனர்.