கோவை: கோவை மாவட்ட நிர்வாகம், தமிழர் பண்பாட்டு ஜல்லிகட்டு பேரவை, கோவை இணைந்து நடத்தும் மாபெரும் ஜல்லிக்கட்டு திருவிழா கோவை செட்டிபாளையம் எல் அண்ட் டி புறவழிச்சாலை அருகே இன்று தொடங்கியது.
தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, போட்டியை தொடங்கி வைத்தார். தமிழர் பண்பாட்டு ஜல்லிகட்டு பேரவை தலைவர் தளபதி முருகேசன் முன்னிலை வகித்தார். மாவட்ட ஆட்சியர் பவன்குமார், மேயர் ரங்கநாயகி, மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், திமுக, மாநகர் மாவட்ட செயலாளர் நா.கார்த்திக்., வடக்கு மாவட்ட செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, எம்.பிக்கள் கணபதி ராஜ்குமார், ஈஸ்வரசாமி, துணைமேயர் வெற்றிச்செல்வன், உள்ளிட்ட பலர் விழாவில் கலந்து கொண்டனர்.
தமிழக முதல்வர் சார்பில், அதிக காளைகளை பிடித்த மாடுபிடி வீரருக்கு ஒரு காரும், யாருக்கும் பிடி படாத சிறந்த காளைக்கு துணை முதல்வர் சார்பில் ஒரு காரும் பரிசாக வழங்கப்பட உள்ளது.
முன்னதாக ஜல்லிக்கட்டு போட்டியில், பங்கேற்ற வீரர்கள் அமைச்சர் முன்னிலையில் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். 800-க்கும் மேற்பட்ட காளைகள் களம் இறக்கப்படுகின்றன. முதல் காளையாக கோவை வரதராஜ பெருமாள் கோவில் காளை களம் இறங்கியது.
கோவை மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் ஆர்வத்துடன் போட்டியை கண்டு ரசித்து வருகின்றனர்.