புதுச்சேரி: வெயில் தாக்கம் அதிகரிப்பால் புதுச்சேரி, காரைக்கால் உட்பட நான்கு பிராந்தியங்களிலும் அரசு பள்ளிகள், அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளுக்கு நாளை முதல் விடுமுறையை கல்வியமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார்.
புதுவையில் அனைத்து அரசு பள்ளிகளிலும் சிபிஎஸ்இ பாடத்திட்டம் அமல்படுத்தப் பட்டுள்ளது. சிபிஎஸ்இ விதிப்படி புதுச்சேரி அரசு பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வு முடிந்து பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டு அடுத்த கல்வியாண்டு நடந்து வருகிறது. ஏப்.1ம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டு ஏப்.30ம் தேதி வரை தொடர்ந்து வகுப்புகள் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
வெயிலின் தாக்கம் புதுவையில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதை கருத்தில்கொண்டு அரசு பள்ளிகளுக்கு முன்கூட்டியே விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக கல்வியமைச்சர் நமச்சிவாயம் கூறுகையில், “அதிகரித்து வரும் கோடை வெயில் தாக்கத்தால் புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் ஆகிய நான்கு பிராந்தியங்களிலும் உள்ள அனைத்து அரசு, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளுக்கு நாளை முதல் ஜூன் மாதம் 1ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்படுகிறது. மீண்டும் பள்ளிகள் ஜூன் 2 முதல் வழக்கம் போல் செயல்படும்” என தெரிவித்தார்.