இஸ்லாமாபாத்: இந்திய ராணுவம் விரைவில் பாகிஸ்தானுக்குள் ஊடுருவும் என்றும், அதனை தவிர்க்க முடியாது என்றும் அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் கவாஜா முகமது ஆசிப் தெரிவித்துள்ளார்.
இஸ்லாமாபாத்தில் ராய்ட்டரஸ் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், “ராணுவ ஊடுருவல் நிகழும். தற்போது அது தவிர்க்க முடியாத ஒன்று என்பதால் நாங்கள் எங்கள் படைகளை பலப்படுத்தியுள்ளோம். தற்போதைய சூழலில் எத்தகைய யுக்திகள் மேற்கொள்ளப்பட வேண்டுமோ அதற்கான முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.” என்று பாதுகாப்பு அமைச்சர் கவாஜா முகமது ஆசிப் தெரிவித்துள்ளார்.
இந்தியா தாக்குதல் நடத்த உள்ளதற்கான சாத்தியம் குறித்து பாகிஸ்தான் ராணுவம் அரசுக்குத் தகவல் தெரிவித்துள்ளதாகவும் கவாஜா முகமது ஆசிப் கூறியுள்ளார். அதேநேரத்தில், விரைவில் ஊடுருவல் நிகழும் என்று அவர் நினைப்பதற்கான காரணங்கள் குறித்து அவர் கூறவில்லை.
பாகிஸ்தானின் அணு ஆயுத பிரயோகம் குறித்த கேள்விக்கு பதில் அளித்த கவாஜா முகமது ஆசிப், “இவ்விஷயத்தில் பாகிஸ்தான் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கும். அதேநேரத்தில், எங்கள் இருப்புக்கு நேரடி அச்சுறுத்தல் இருந்தால் மட்டுமே அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவோம்.” என்று தெரிவித்துள்ளார்.
போரை தவிர்க்க பாகிஸ்தான் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்து விளக்கிய கவாஜா முகமது ஆசிப், “வளைகுடா நாடுகள் மற்றும் சீனா உள்ளிட்ட நட்பு நாடுகளை அணுகினோம். பிரிட்டன், அமெரிக்கா மற்றும் பிற நாடுகளுக்கும் நிலைமை குறித்து விளக்கமளித்துள்ளோம். அரேபிய வளைகுடாவில் உள்ள எங்கள் நண்பர்கள் சிலர் இரு தரப்பினருடனும் பேசியுள்ளனர்.” என்று தெரிவித்துள்ளார்.
இந்தியாவும் பாகிஸ்தானும் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று நேற்று (திங்கள்) சீனா வேண்டுகோள் விடுத்தது. மேலும், நிலைமையை தணிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் வரவேற்பதாகவும் அது கூறியது.
இந்த விவகாரத்தில் தலையிடுவதில் இருந்து அமெரிக்கா ‘விலகி’ இருப்பதாக கவாஜா முகமது ஆசிப் தெரிவித்தார். இந்தியாவும் பாகிஸ்தானும் தங்களுக்கு இடையேயான உறவுகளை முடிவு செய்யும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடந்த வாரம் கூறினார். எனினும், இரு தரப்பினருடனும் தொடர்பில் இருப்பதாகவும், ‘பொறுப்பான தீர்வை’ நோக்கிச் செயல்படுமாறு வலியுறுத்துவதாகவும் அமெரிக்க வெளியுறவுத்துறை கூறியுள்ளது.