பஹல்காம் தாக்குதல் எதிரொலி: காஷ்மீரில் பூங்காக்கள், சுற்றுலா தலங்கள் மூடல்!

ஸ்ரீநகர்: பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக காஷ்மீரில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கான பூங்காக்கள் மற்றும் சில சுற்றுலா தலங்கள் மூடப்பட்டுள்ளன.

ஜம்மு காஷ்மீர் அரசின் இந்த நடவடிக்கை குறித்து அதிகாரிகள் கூறுகையில், “காஷ்மீரில் தாக்குதல் அச்சுறுத்தல் உள்ள சுமார் 50 பூங்காக்கள் மூடப்பட்டுள்ளன. மூடப்பட்டுள்ள பூங்காக்கள் காஷ்மீரில் இருந்து தொலைவில் உள்ளன. அவற்றில் சில கடந்த 10 ஆண்டுகளில் புதிதாக திறக்கப்பப்படவை. பாதுகாப்பு சோதனை என்பது ஒரு தொடர் நடவடிக்கை. வரும் நாட்களில் இந்த மூடப்படும் பட்டியலில் மேலும் சில இடங்கள் சேர்க்கப்படலாம்.” என்றனர்.

அதேபோல், சுற்றுலா பயணிகள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள இடங்களில், தூஷ்பத்ரி, கோகேர்நாக், துக்சும், சின்தான் டாப், அக்சாபால், பங்கஸ் பள்ளத்தாக்கு, மார்கன் டாப் மற்றும் தோஸ்மைதானம் ஆகியவை அடங்கும். தெற்கு காஷ்மீரில் உள்ள பிரபல மொகல் தோட்டங்களுக்குச் செல்வதற்கும் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இந்த மூடல் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்புகள் எதுவும் வெளியிடப்படவில்லை என்றாலும், அந்தப் பகுதிகளுக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, கடந்த செவ்வாய்க்கிழமை (ஏப்.22) ஜம்மு காஷ்மீரின் பஹல்காமுக்கு அருகில் உள்ள பைசரன் புல்வெளியில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூரத் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்ட நிலையில், சம்பவம் நடந்து ஒருவாரம் கழித்து சுற்றுலா தலங்களுக்கான அனுமதி மறுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கொல்லப்பட்டவர்களில் பொரும்பாலானவர்கள் சுற்றுலா பயணிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.