35 பந்துகளில் சதம்… சாதனை படைத்த வைபவ் சூர்யவன்ஷி

ஜெய்ப்பூர்,

ஐ.பி.எல். தொடரில் ஜெய்ப்பூரில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ், ரியான் பராக் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற ராஜஸ்தான் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.

இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 209 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து 210 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ராஜஸ்தான் அணி விளையாடியது.

ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக ஜெய்ஸ்வால்-வைபர் சூர்யவன்ஷி களமிறங்கினர். இந்த ஜோடி குஜராத் அணியின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தது. 14 வயதே ஆன இளம் வீரர் வைபவ், நடப்பு ஐ.பி.எல். சீசனில் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

இன்றைய ஆட்டத்தில் அவர் 17 பந்துகளில் 51 ரன்கள் விளாசி அசத்தினார். இதன் மூலம் ஐ.பி.எல். தொடரில் இளம் வயதில் அரைசதம் அடித்த வீரர் என்ற சாதனையை வைபவ் படைத்துள்ளார். இதன் பிறகும் வைபவ் சூர்யவன்ஷியின் அதிரடி தொடர்ந்தது.

கரீம் ஜனத் வீசிய 10-வது ஓவரில் வைபவ் 3 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளை பறக்கவிட்டார். தொடர்ந்து 35 பந்துகளில் 11 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகளுடன் சதம் விளாசினார். இதன் மூலம் ஐ.பி.எல். போட்டிகளில் மிக இளம் வயதில் சதம் அடித்த வீர என்ற சாதனையை வைபவ் படைத்துள்ளார்.

அதே போல் ஐ.பி.எல். வரலாற்றில் கிறிஸ் கெய்லுக்கு பிறகு(30 பந்துகளில் சதம்) அதிவேக சதம் அடித்த 2-வது வீரர் என்ற சாதனைக்கும் வைபவ் சொந்தக்காரராகியுள்ளார். தொடர்ந்து 12-வது ஓவரில் பிரசித் பந்துவீச்சில் போல்ட் ஆனபோது ஒருவழியாக வைபவ் சூர்யவன்ஷியின் அதிரடி நிறைவுக்கு வந்தது.

இந்த ஆட்டத்தில் வைபவ் 38 பந்துகளில் 101 ரன்கள் விளாசியுள்ளார். இன்றைய ஆட்டத்தின் மூலம் ஒரு அணிக்கு எதிராக பவர்பிளே ஓவர்களில் ராஜஸ்தான் அணி அதிகபட்ச ரன்களை(87 ரன்கள்) பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.