ரஷியாவின் அச்சுறுத்தலுக்கு நாங்கள் அடிபணிய போவதில்லை – உக்ரைன் திட்டவட்டம்!

நியூயார்க்,
உக்ரைன் விவகாரத்தில் திடீர் அறிவிப்பாக, கிழக்கு உக்ரைனில் கிளர்ச்சியாளர்கள் வசம் உள்ள டுனெட்ஸ்க் மற்றும் லுகன்ஸ்க் ஆகிய மாகாணங்களை தனி நகரங்களாக அங்கீகரிக்கப்படும் என்று ரஷ்ய அதிபர் புதின் அறிவித்தார். 

இந்த அறிவிப்பு காரணமாக, உக்ரைன் விவகாரத்தில் பதற்றம் இன்னும் அதிகரித்தது. இதற்கு அமெரிக்கா மற்றும் கூட்டணி நாடுகள் கடும் எதிர்ப்பினை தெரிவித்துள்ளன.உக்ரைனில் உள்ள ரஷ்ய சார்பு பிராந்தியங்கள் மீது பொருளாதாரத் தடை விதிக்கப்படுவதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்துள்ளார்.
இந்த நிலையில்,உக்ரைன் விவகாரம் தொடர்பாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் இன்று அவசர கூட்டத்தை தொடங்கி நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் ஐக்கிய நாடுகள் சபைக்கான உக்ரைன் பிரதிநிதி செர்ஜி கிஸ்லிட்சியா பேசுகையில்,
“ரஷ்ய அதிபர் புதினின் இந்த நடவடிக்கையால் இன்று ஐக்கிய நாடுகள் சபையின் முழு உறுப்பினர்களும் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.
நாங்கள் அமைதியை விரும்புகிறோம் மேலும் எங்கள் நடவடிக்கைகளில் நாங்கள் தெளிவாக உள்ளோம். அரசியல் மற்றும் இராஜதந்திர தீர்வுக்கு நாங்கள் உறுதியாக உள்ளோம், ரஷ்யாவின் அச்சுறுத்தலுக்கு நாங்கள் அடிபணியப் போவதில்லை.
மேலும் பேச்சுவார்த்தைகளுக்கு திரும்புமாறு ரஷ்யாவை நாங்கள் அழைக்கிறோம். உக்ரைனின் பிரதேசங்களில் கூடுதல் ரஷ்ய ஆக்கிரமிப்புப் படைகளை நிலைநிறுத்துவதற்கான உத்தரவை நாங்கள் கண்டிக்கிறோம். ரஷ்யா தனது ஆக்கிரமிப்புப் படைகளை உடனடியாகவும் முழுமையாகவும் திரும்பப் பெற வேண்டும் என்று நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்” 
இவ்வாறு ஐ.நா.வுக்கான உக்ரைன் பிரதிநிதி செர்ஜி கிஸ்லிட்சியா உக்ரைனின் நிலைப்பாட்டை தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.