பழம்பெரும் நடிகை லலிதா காலமானார்

பழம்பெரும் நடிகையான கே.பி.ஏ.சி.லலிதா கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதலே உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். பிறகு, உடல்நிலை தேறிய நிலையில், அவரது மகனும் நடிகருமான சித்தார்த் பரதன் வீட்டில் தங்கி ஓய்வெடுத்து வந்தார். இந்த நிலையில் நேற்றிரவு (பிப்.,22) லலிதா காலமானார். அவருக்கு வயது 74.

நாடக நடிகையாக தனது பயணத்தை தொடங்கிய லலிதா, மலையாளத்தில் குணச்சித்திர வேடங்களில் நடித்து பிரபலமானார். தமிழில் ‛காதலுக்கு மரியாதை', ‛பரமசிவன்', ‛கிரீடம்', ‛அலைபாயுதே', ‛மாமனிதன்' உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். கேரள சங்கீத நாடக அகாடமியின் தலைவராகவும் லலிதா உள்ளார். மொத்தம் 550க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ள இவர், பிரபல மலையாள இயக்குநர் பரதனின் மனைவி ஆவார். இயக்குநர் பரதன் ததமிழில் ஆவாரம்பூ, தேவர் மகன் போன்ற படங்களையும் இயக்கியுள்ளார். அவர் 1998ம் ஆண்டு காலமானார்.

1991 மற்றும் 2001-ம் ஆண்டுகளுக்கான சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருதையும் நான்கு முறை கேரள அரசின் விருதையும் பெற்றுள்ளார். இவர் காயங்குலத்தில் இருந்த கே.பி.ஏ.சி என்னும் பிரபல நாடக சபாவில் பணியாற்றி வந்ததால், அவர் கே.பி.ஏ.சி லலிதா என்று அழைக்கப்பட்டார்.

லலிதாவின் மரணத்திற்கு மலையாளம் மற்றும் தமிழ் சினிமா பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். லலிதாவின் இறுதிச் சடங்குகள் வடக்கன்சேரியில் உள்ள அவரது இல்லத்தில் இன்று நடைபெறுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.