சுயநிதி கல்லூரிகளில் மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கை கலந்தாய்வு தொடக்கம்.!

இளநிலை மருத்துவ படிப்புகளுக்களில் சுய நிதி கல்லூரிகளில் உள்ள நிர்வாக இடங்களுக்கான கலந்தாய்வு வரும் 25-ஆம் தேதி தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை முதல்கட்ட கலந்தாய்வு அண்மையில் நடைபெற்று முடிந்தது. இதில் சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வும், அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 விழுக்காடு உள் ஒதுக்கீட்டு கலந்தாய்வும், நேரடியாக நடைபெற்றது. பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு இணையதளம் வாயிலாக நடைபெற்று முடிந்தது. இந்த கலந்தாய்வில் மொத்தமுள்ள 7,257 இடங்களில், 7,254 இடங்கள் நிரப்பட்டு விட்டன. 

தனியார் கல்லூரியில் மூன்று பி.டி.எஸ். இடங்கள் மட்டும் காலியாக உள்ளன. கலந்தாய்வு மூலம் இடம் கிடைத்தவர்கள் கல்லூரிகளில் சேர்வதற்கான கடைசி தேதியும் நிறைவு பெற்றது. இடம் கிடைத்தும் குறிப்பிட்ட கடைசி தேதிக்குள் கல்லூரியில் சேராமல் விடுபட்ட இடங்களும், நிரப்ப படாமல் இருக்கும் மூன்று இடங்களும் இரண்டாம் கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட இருக்கிறது. இந்த கலந்தாய்வு மார்ச் முதல் வாரம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் தனியார் சுயநிதி கல்லூரிகளில் உள்ள எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான மேனேஜ்மெண்ட் கோட்டா என்று சொல்லப்படும் நிர்வாக பிரிவு இடங்களுக்கான கலந்தாய்வு வரும் 25- ஆம் தேதி இணையதளம் வாயிலாக நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கலந்தாய்வில் மாணவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும் இடங்கள் தொடர்பான விவரங்களை வரும் 28-ஆம் தேதி முதல் இணையதளம் வாயிலாக தெரிந்து கொள்ளலாம் என்றும், இட ஒதுக்கீடு பெற்ற மாணவர்கள் மார்ச் ஒன்றாம் தேதி முதல், 7-ஆம் தேதிக்குள்ளாக கல்லூரிகளில் சேர்ந்து விட வேண்டும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும் இணையதளம் வாயிலாக பிற தகவல்களை தெரிந்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.