தி.மு.க. தொண்டர் மீது தாக்குதல்: அ.தி.மு.க. பிரமுகர்கள் 2 பேர் கைது

சென்னை:

தண்டையார்பேட்டை சஞ்சீவிராயன் கோவில் தெருவில் உள்ள வாக்குச்சாவடியில் கடந்த 19-ந்தேதி நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின்போது கள்ள ஓட்டு பிரச்சினை தொடர்பாக தி.மு.க. – அ.தி.மு.க.வினர் இடையே தகராறு ஏற்பட்டது.

அப்போது அங்கு வந்த அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் கட்சி நிர்வாகிகள் தி.மு.க. தொண்டரான நரேஷ்குமார் என்பவரை பிடித்து அவரது சட்டையை கழற்றி ஊர்வலமாக அழைத்து சென்று போலீசில் ஒப்படைத்தனர். இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

இது தொடர்பான புகாரின் பேரில் தண்டையார்பேட்டை போலீசார் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்பட 40 பேர் மீது 10 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதே போல் ஓட்டுப்பதிவின் போது தனது காரை செல்ல விடாமல் போலீசார் தடுத்ததாக சாலை மறியல் செய்த வழக்கிலும் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் தி.மு.க. தொண்டரை தாக்கிய வழக்கு தொடர்பாக வடசென்னை மாவட்ட அம்மா பேரவை இணை செயலாளர்களான பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த பரமேஸ்வரன், தண்டையார்பேட்டையைச் சேர்ந்த டில்லிராஜ் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் தாக்குதலில் ஈடுபட்ட அ.தி.மு.க.வினர் குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது. அவர்களும் விரைவில் கைது செய்யப்படலாம் என்று தெரிகிறது.

இதற்கிடையே தி.மு.க. தொண்டரை தாக்கியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் ஜெயக்குமாரை 5 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்று தண்டையார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜார்ஜ் டவுன் கோர்ட்டில் மனுதாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு விசாரணை இன்று நடைபெற்றது.

அப்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஜெயக்குமாரை போலீசார் பாதுகாப்புடன் அழைத்து வந்து ஜார்ஜ்டவுன் 15-வது நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட்டு முன்னிலையில் ஆஜர்படுத்தினர்.

இதுபற்றி அறிந்ததும் அ.தி.மு.க. தொண்டர்கள் ஏராளமானோர் கோர்ட்டு வளாகத்தில் திரண்டனர். இதனால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.