இந்தியாவிடம் ஊமைக் குசும்பு செய்த உக்ரைன்.. பழசை மறக்க முடியாதே பரமா!

உக்ரைனை விட ரஷ்யாவின் பக்கம் இந்தியா அதிகம் சாய்ந்து நிற்க சில முக்கிய காரணங்கள் உள்ளன. இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டுள்ள நாடுதான்
உக்ரைன்
. அதை இந்திய மக்களால் மறக்க முடியாது.

அப்படி என்ன நமக்கு தீங்கு செய்து விட்டது உக்ரைன் என்று உங்களுக்குள் கேள்வி எழலாம். அதைப் பற்றிப் பார்க்க நாம் சற்று பின்னோக்கிச் செல்ல வேண்டும்.

1998ம் ஆண்டு..மத்தியில் வாஜ்பாய் அரசு பதவியில் இருந்தது. அப்போது யாரும் எதிர்பாரத ஒரு அதிரடியை அரங்கேற்றினார் வாஜ்பாய். ராஜஸ்தான் மாநிலம் பொக்ரான் பாலைவனத்தில் இந்தியா அணு ஆயுத சோதனை நடத்தி உலகையே அதிர வைத்தது. ஆபரேஷன் சக்தி என்று அதற்குப் பெயரிட்டு அப்துல் கலாம் தலைமையிலான குழுவினர் நடத்திய இந்த அணு ஆயுத சோதனை அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதையடுத்து இந்தியாவுக்கு எதிராக பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டன. இங்குதான் உக்ரைன் சீனுக்கு வருகிறது.

ஐ.நா. பாதுகாப்பு சபையில் உக்ரைன் உள்ளிட்ட 25 நாடுகள் இந்தியாவுக்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்தன. இந்தியாவின் அணு ஆயுத சோதனையைக் கண்டிக்கும் தீர்மானம் அது. இந்தத் தீர்மானத்தை ஆதரித்து உக்ரைன் ஓட்டளித்தது. இந்தியாவை முடக்கிப் போடும் தீர்மானம் அது.

ஆனால் இந்தியா இந்த தடையை தூசி போல ஊதித் தள்ளியது. உள்நாட்டுத் தயாரிப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்தது. எதையெல்லாம் வெளியிலிருந்து இறக்குமதி செய்தோமோ அதையெல்லாம் இங்கேயே தயாரிக்க ஆரம்பித்தது. இந்தியா இப்படி பொருளாதாரத் தடையை சமாளித்து வந்த நிலையில் மறுபக்கம் பாகிஸ்தானுடன் நெருங்கி உறவாடியது உக்ரைன். பாகிஸ்தானுக்குத் தேவையான பல உதவிகளை உக்ரைன் செய்தது.

நாம் ரஷ்யாவின் நட்பு நாடு என்பதால் ரஷ்யாவிடமிருந்து நாம் ஆயுதம் வாங்கினால், பாகிஸ்தானுக்கு ஆயுதம் அளித்து இந்தியாவை கடுப்பேற்றியது உக்ரைன். பல்வேறு போர்த் தளவாடங்களை பாகிஸ்தானுக்கு அது விற்றது. இன்னும் குறிப்பிட்டு சொல்வதாக இருந்தால், உக்ரைன் நாட்டிடமிருந்துதான் பாகிஸ்தான் அதிக அளவில் ஆயுதங்களை வாங்கிக் குவித்தது.

இப்படி இந்தியாவுக்கு எதிராக செயல்பட்ட, பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை அள்ளிக் கொடுத்த, அணு ஆயுத சோதனையை கண்டித்த உக்ரைன்தான் இன்று ரஷ்யாவிடமிருந்து எங்களைக் காப்பாற்றுங்கள் என்று இந்தியாவிடம் வந்து நிற்கிறது. மகாபாரதப் போரையெல்லாம் இழுத்து வருகிறது. “மோடிஜி” காப்பாற்றுங்கள் என்று கதறுகிறது. ஆனால் இந்தியாவால் பழசை மறக்க முடியவில்லை. மேலும் நமக்கு எதிராக நடந்து கொண்ட உக்ரைனை ஆதரிப்பதை விட நட்பு நாடான ரஷ்யாவின் பக்கம் சாய்வதே சரியானது என்ற நிலைப்பாட்டிலும் இந்திய அரசு இருப்பதாக தெரிகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.