அடங்க மறுக்கும் வடகொரியா – 8வது முறையாக ஏவுகணை சோதனை

சியோல்:
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானங்களை மீறி வட கொரியா அணு ஆயுதங்கள் மற்றும் அபாயகரமான ஏவுகணைகளை சோதித்து வருவதால் அந்த நாட்டின் மீது சர்வதேச நாடுகள் கடுமையான பொருளாதார தடைகளை விதித்துள்ளன. இதன் விளைவாக வட கொரியா கடுமையான பொருளாதார நெருக்கடியில் தவித்து வருகிறது. 
இந்த நெருக்கடிக்கு மத்தியிலும் வட கொரியா தனது ராணுவத் திறனை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தி வருகிறது. இதற்காக ஏவுகணை சோதனையை தொடர்கிறது. ஒலியைவிட 5 மடங்கு வேகமாக செல்கிற ஹைபர்சோனிக் ஏவுகணை, கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை சோதித்ததால் அமெரிக்கா கடும் ஆத்திரமடைந்தது. உடனடியாக, அந்த ஏவுகணை சோதனையில் தொடர்புடைய வடகொரியாவின் 5 மூத்த அதிகாரிகள் மீது ஜோ பைடன் நிர்வாகம் பொருளாதார தடை விதித்து உத்தரவிட்டது. 
இதற்கிடையே, உக்ரைன் – ரஷ்யா பதற்றங்களால் அமெரிக்கா திசை திருப்பப்பட்டுள்ள சூழலில் வடகொரியா ஏவுகணை சோதனை உள்ளிட்ட ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளில் ஈடுபட வாய்ப்பு உள்ளதாக தென்கொரியா அதிபர் வேட்பாளர் யூன் சுக்-யோல் கடந்த வாரம் எச்சரித்திருந்தார்.
இந்நிலையில், கிழக்குக் கடற்கரையில் உள்ள கடலை நோக்கி பாலிஸ்டிக் ஏவுகணையை வடகொரியா ஏவியுள்ளது. தலைநகர் பியோங்யாங்கிற்கு அருகிலுள்ள சுனானில் இருந்து இன்று காலை 7.52 மணிக்கு ஏவுகணை ஏவப்பட்டது என தென்கொரிய ராணுவம் தெரிவித்துள்ளது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.