கொரோனா 4ம் அலை எப்போது? – ஆய்வில் வெளியான ஷாக் நியூஸ்!

கொரோனா வைரஸ் தொற்றின் நான்காவது அலை வரும் ஜூன் மாதத்தில் பரவ வாய்ப்பு உள்ளதாக ஐஐடி கான்பூர் ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அண்டை நாடான சீனாவின் வூகான் நகரில், கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில், கொரோனா வைரஸ் தொற்று முதன்முதலில் பரவியது. இது, இந்தியா, அமெரிக்கா, இத்தாலி, பிரிட்டன், பிரான்ஸ், ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளுக்கு பரவி கடும் பாதிப்புகளை ஏற்படுத்தியது. கொரோனா தொற்றுக்கு எதிராக தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு விட்டாலும், அது பல்வேறு வகைகளில் உருமாற்றம் அடைந்து வருவது, சுகாதாரத் துறையினரை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.

இந்தியாவில், கடந்த 2021 ஆம் ஆண்டு கொரோனா இரண்டாம் அலையும், நடப்பு ஆண்டு ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில், கொரோனா மூன்றாம் அலையும் பரவியது. ஒமைக்ரான் பரவல், மூன்றாம் அலை உருவாக மிக முக்கிய காரணியாக அமைந்தது. இந்த வைரஸ் தொற்று அதி வேகமாகப் பரவினாலும், அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்தவில்லை.

இந்நிலையில், கொரோனா வைரஸ் தொற்றின் நான்காவது அலை வரும் ஜூன் மாதத்தில் பரவ வாய்ப்பு உள்ளதாக ஐஐடி கான்பூர் ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக, ஐஐடி கான்பூர் ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்து உள்ளதாவது:

இந்தியாவில் கொரோனா நான்காவது அலையானது வரும் ஜூன் மாதம் 22 ஆம் தேதி தொடங்கி அக்டோபர் மாதம் 24 ஆம் தேதி வரை நீடிக்கும். என்றாலும், புதிய கொரோனா வகைகளின் வெளிப்படுதல் மற்றும் பூஸ்டர் டோஸ் உள்பட மக்களின் தடுப்பூசி நிலை ஆகியவற்றுக்கு ஏற்பவே, நான்காவது அலையின் கடுமை அமையும். ஒருவேளை நான்காவது அலை பரவல் தோன்றினால், அது நான்கு மாதங்கள் வரை இருக்கும். இந்த அலையானது ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை உச்சமடையும். அதன் பின்னர் குறைய தொடங்கும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.