ரஷிய ராணுவத்தை எதிர்க்க தேவைப்பட்டால் துப்பாக்கியை எடுப்பேன் – உக்ரைன் பெண் எம்.பி.அதிரடி

கீவ், 
ரஷியா-உக்ரைன் போரினால் இரு நாடுகளுக்கும் பெருமளவில் உயிரிழப்பும், பொருளாதார இழப்பும் ஏற்பட்டுள்ளது.  
இந்நிலையில், ரஷியாவிற்கு எதிராக போரிட ராணுவ சேவைக்கு தகுதியாக உள்ள  நபர்களின் எண்ணிக்கை அடிப்படையில் முழு ராணுவத்தை திரட்டும் பணிகளை முடிக்க வேண்டும் என உக்ரைன் ராணுவ அதிகாரிகளுக்கு அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி உத்தரவிட்டிருந்தார். 
அதிபரின் அழைப்பை ஏற்று உக்ரைன் டென்னிஸ் வீரர் செர்கி ஸ்டாகோவ்ஸ்கி ரஷ்யாவுக்கு எதிராக போரிட தனது நாட்டு ராணுவத்தில் இணைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதன் தொடர்ச்சியாக ரஷிய ராணுவத்தை எதிர்க்க, தேவைப்பட்டால் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை ஏந்த தயாராக இருப்பதாக உக்ரைன் பாராளுமன்ற உறுப்பினர் இன்னா சோவ்சுன் தெரிவித்துள்ளார். 
ஏ.என்.ஐ.செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்துள்ள பேட்டியில், துப்பாக்கியை தாம் வெறுப்பதாகவும், ஆனால் எந்த ஒரு ரஷிய வீரரும் தமது நாட்டிற்குள்ளும், வீட்டிற்குள்ளும் நுழைய அனுமதிக்க மாட்டேன் எனவும் கூறினார்.
தேவை ஏற்பட்டால் துப்பாக்கியை எடுப்பேன் என்றும், இதற்காக தமது சகோதர் மற்றும் நண்பர்கள் மூலம் பயிற்சி எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 
நாட்டிற்காக போரிட தயார், அதையும் சிறப்பாக செய்வேன் என்றும்  இன்னா சோவ்சுன் எம்.பி. குறிப்பிட்டுள்ளார். உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியா, உக்ரைன் உள்ளிட்ட பிற ஜனநாயக நாடுகளுக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்நிலையல் உக்ரேனிய பாராளுமன்ற எம்.பி.க்கள்,  கிரா ருடிக் மற்றும் லெசியா வாசிலென்கோ ஆகியோர் தேசத்தை பாதுகாக்க நாடு முழுவதும் உள்ள பெண்கள், அரசியல்வாதிகள் தேவைப்படும் நேரத்தில் ஆயுதம் ஏந்தி போராடுவார்கள் என தெரிவித்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.