மறைமுகத் தேர்தலை அமைதியாக நடத்த வேண்டும்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: மறைமுகத் தேர்தலை அமைதியாக நடத்த வேண்டும் என மாநிலத் தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை நகராட்சிக்கு கடந்த பிப்.19-ம் தேதி நடந்த தேர்தலில் கவுன்சிலர்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட சுந்தரலிங்கம் உள்பட 15 அதிமுக கவுன்சிலர்கள், மார்ச் 4-ம் தேதி நடக்கவுள்ள மறைமுகத் தேர்தலை தள்ளிவைக்க கூடாது என மாநிலத் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். அந்த மனுவில், தங்களை ஆளுங்கட்சியினர் மிரட்டுவதாக புகார் தெரிவித்திருந்தனர்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மாநிலத் தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ”மறைமுகத் தேர்தல் நடவடிக்கைகள் கண்காணிப்பு கேமராவில் பதிவு செய்யப்படும். உரிய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படும். எனவே, மறைமுகத் தேர்தலை தள்ளிவைக்கும் திட்டமில்லை” என்று விளக்கமளித்தார்.

இதற்கு பதிலளித்த மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், ”கண்காணிப்பு கேமராவில் ஆடியோ பதிவாகாது. எனவே, வீடியோ பதிவு செய்ய உத்தரவிட வேண்டும்” எனக் கோரினார். அப்போது, தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர், ”மனுதாரருக்கு எதிராக, நகராட்சியில் கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்ட இருவரை கடத்தியதாக புகார் உள்ளது. அதுதொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது, ஆனால் இதுவரை எந்த கைது நடவடிக்கையும் எடுக்கவில்லை” என தெரிவித்தார்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், ”தேர்தல் தள்ளிவைக்கப்படலாம் என்று மனுதாரர்கள் அச்சம் கொள்ள எந்தக் காரணமும் இல்லை. திட்டமிட்டபடி தேர்தல் நடத்தலாம். நகர்புற உள்ளாட்சித் தேர்தலின்போது, நீதிமன்ற உத்தரவின்படி, தேர்தல் ஆணையம் அனைத்து நடவடிக்கைகளையும் கண்காணிப்பு கேமரா மூலம் பதிவு செய்தது. எனவே, மறைமுகத் தேர்தலில் அந்த நடைமுறையை மாற்ற வேண்டாம்” என உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர்.

அதேசமயம், மறைமுகத் தேர்தலை அமைதியாக நடத்த அறிவுறுத்திய நீதிபதிகள், ”ஏதேனும் சட்டவிரோத செயல்கள் நடந்தால் மனுதாரர்கள் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையை அணுகலாம்” எனவும் உத்தரவிட்டனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.