அரசின் கெடுபிடியால் 10 கோடியை இழந்த பீம்லா நாயக்

பவன் கல்யாண், ராணா நடிப்பில் கடந்த வெள்ளியன்று பீம்லா நாயக் திரைப்படம் வெளியானது. மலையாளத்தில் மிகப்பெரிய வெற்றி பெற்ற அய்யப்பனும் கோஷியும் படத்தின் ரீமேக்காக இந்த படம் உருவாகியுள்ளது. சாஹர் சந்திரா இயக்கிய இந்தப்படத்திற்கு திரிவிக்ரம் ஸ்ரீநிவாஸ் திரைக்கதை எழுதியுள்ளார். தமன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு பெற்ற இந்தப்படம் ஆந்திராவில் முதல் நாள் வசூலாக 14.5 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. ஆனால் இதற்கு முன்னதாக பவன் கல்யாண் நடிப்பில் வெளியான வக்கீல் சாப் திரைப்படம் முதல்நாள் 23.6 கோடி வசூலித்தது. தற்போது கிட்டத்தட்ட 10 கோடி ரூபாய் வசூல் குறைந்ததற்கு, தியேட்டர் கட்டணத்தை உயர்த்தக் கூடாது என சமீபத்தில் ஆந்திர அரசு கெடுபிடியாக விதித்த விதிமுறைகள் தான் காரணம் என்று தற்போது திரையுலகில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இதை காரணம் காட்டியே பல திரையரங்குகள் தங்களுக்கு மிகப்பெரிய அளவில் நஷ்டம் ஏற்படும் என்று இந்த படத்தை திரையிட மறுத்த நிகழ்வுகளும் நடந்துள்ளன.

கடந்த சில நாட்களுக்கு முன்னதாக தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களான சிரஞ்சீவி, மகேஷ்பாபு, பிரபாஸ் உள்ளிட்ட பலரும் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியை நேரில் சந்தித்து, தியேட்டர் கட்டணங்களை உயர்த்துவதற்கான கோரிக்கை குறித்து நேரிலேயே வலியுறுத்தி வந்தனர்.

அதுமட்டுமல்ல தியேட்டர் கட்டணத்தை வரம்புக்குள் கொண்டு வருவது தொடர்பான வழக்கு தற்போது நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் ஆந்திர அரசு தியேட்டர்களில் காட்டிய கெடுபிடி காரணமாக குறைந்த அளவு கட்டணமே வசூலிக்கப்பட்டதால் இந்த மிகப்பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரத்தில் சொல்லப்பட்டு வருகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.