BREAKING: உருக்குலையும் உக்ரைன் – ரஷ்ய தாக்குதலில் இந்திய மாணவர் பலி!

உக்ரைன் நாட்டின் கார்கிவ் நகரில், ரஷ்யப் படைகள் நடத்திய குண்டு வீச்சு தாக்குதலில், இந்திய மாணவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம், கடும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் அதிரடி உத்தரவை அடுத்து, உக்ரைன் நாட்டு மீது ரஷ்யப் படைகள் கடும் தாக்குதலை நடத்தி வருகின்றன. கடந்த ஆறு நாட்களாக உக்ரைன் நாட்டில் ரஷ்யப் படைகள் நடத்தி வரும் தாக்குதலில், உக்ரைன் மட்டுமல்லாமல், உலகமே பதற்றத்தில் ஆழ்ந்துள்ளது. உக்ரைன் நாட்டு தலைநகர் கீவ், கார்கிவ் உள்ளிட்ட இடங்களில் ரஷ்யப் படைகளின் படையெடுப்பு அதிகரித்து உள்ளது. ரஷ்ய ராணுவத்தினருக்கு பதிலடி கொடுக்கும் வகையில், உக்ரைன் நாட்டு ராணுவத்தினரும் முடிந்தவரை பதில் தாக்குதல் கொடுத்து வருகின்றனர்.

இதற்கிடையே உக்ரைன் நாட்டில் சிக்கி உள்ள இந்தியர்களை மீட்க மத்திய – மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றன. ஆப்பரேஷன் கங்கா என பெயரிடப்பட்டுள்ள இந்தத் திட்டத்திற்கு, மத்திய அமைச்சர்கள் ஒருங்கிணைப்பாளர்களாக அறிவிக்கப்பட்டு உள்ளனர். மேலும், உக்ரைன் நாட்டின் எல்லை நாடுகளுக்கு மத்திய அமைச்சர்களை அனுப்பி, மாணவர்கள் உட்பட இந்தியர்களை மீட்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி, ஏற்கனவே மத்திய அமைச்சர் ஒருவர் ஹங்கேரி நாட்டிற்கு சென்றுள்ளார்.

‘கீவ் நகரில் இருந்து உடனே வெளியேறுங்க!’ – இந்தியர்களுக்கு அறிவுறுத்தல்!

இந்நிலையில் இன்று, உக்ரைன் நாட்டின் கார்கிவ் நகரில் ரஷ்யப் படைகள் நடத்திய பயங்கர தாக்குதலில், இந்திய மாணவர் ஒருவர் உயிரிழந்து உள்ளதாக, இந்திய வெளியுறவுத் துறை தகவல் தெரிவித்துள்ளது.

உயிரிழந்த மாணவர், கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர் என்றும், அவரது பெயர் நவீன் என்றும், கார்கிவ் நகரில் இருந்து வெளியேற ரயில் நிலையம் நோக்கி சென்ற போது தாக்குதலில் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், உயிரிழந்த மாணவரின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாகவும் இந்திய வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.