உக்ரைன் போரில் இந்திய மாணவர் பலி: ராகுல் காந்தி வேதனை!

ஒவ்வொரு நிமிடமும் விலைமதிப்பற்றது என, காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி வேதனை தெரிவித்து உள்ளார்.

உக்ரைன் நாட்டில், ரஷ்யப் படைகள் கடந்த ஆறு நாட்களாக தாக்குதல் நடத்தி வருகின்றன. தலைநகர் கீவ், கார்கிவ் உள்ளிட்ட நகரங்களை சுற்றி வளைத்த ரஷ்யப் படைகள், அரசு கட்டடங்கள், மக்கள் வசிக்கும் குடியிருப்புகளை நோக்கி குண்டு வீச்சு தாக்குதலில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ரஷ்யப் படைகளின் தாக்குதலுக்கு தங்களால் முடிந்தவரை உக்ரைன் நாட்டு ராணுவத்தினரும் தாக்குதல் கொடுத்து வருகின்றன.

ரஷ்ய தாக்குதலில் இந்திய மாணவர் பலி!

இதற்கிடையே இன்று, கார்கிவ் நகரில் ரஷ்யப் படைகள் நடத்திய குண்டு வீச்சு தாக்குதலில், இந்திய மாணவர் நவீன் என்பவர் உயிரிழந்தார். இவர் கர்நாடக மாநிலம் ஹவேரியைச் சேர்ந்தவர். இந்த தகவலை மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் உறுதிப்படுத்தி உள்ளது.

இந்நிலையில், காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி, சமூக வலைதளமான ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்து உள்ளதாவது:

கார்கிவ் நகரில் ரஷ்யப் படைகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்த இந்திய மாணவர் நவீன் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். உக்ரைனில் சிக்கி உள்ள இந்தியர்களை மீட்பதற்கு மத்திய அரசு தெளிவாக திட்டமிட்ட வேண்டும். ஒவ்வொரு நிமிடமும் விலை மதிப்பற்றது.

இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.