2022ன் முதல் பிளாக்பஸ்டர் 'வலிமை', தியேட்டர்காரர்கள் மகிழ்ச்சி

2022ம் ஆண்டு கொரோனா ஒமிக்ரான் அலை தாக்கத்துடன்தான் ஆரம்பமானது. டிசம்பர் மாதத்திலேயே ஒமிக்ரான் பரவல் பற்றிய எச்சரிக்கை விடப்பட்டு ஜனவரி மாதத்தில் தியேட்டர்கள் 50 சதவீத இருக்கையுடன் செயல்பட வேண்டும் என மாநில அரசு உத்தரவிட்டது. இந்தியா முழுவதும் இந்நிலை பல மாநிலங்களில் இருக்க பொங்கலுக்கு வெளிவர வேண்டிய பல படங்களின் வெளியீட்டைத் தள்ளி வைத்தார்கள்.

அவற்றில் அஜித் நடித்த 'வலிமை' படமும் ஒன்று. ஜனவரி 7ம் தேதி வெளியாவதாக இருந்த இப்படத்தின் வெளியீட்டையும் தள்ளி வைப்பதாக அறிவித்தார்கள். அதன்பின் பிப்ரவரி மாதத் துவக்கத்திலேயே ஒமிக்ரான் பரவல் சற்றே குறைய ஆரம்பித்தால் புதிய படங்களின் வெளியீடுகளையும் திட்டமிட்டார்கள். அடுத்து 100 சதவீத இருக்கைக்கும் அனுமதி கொடுத்தார்கள்.

கடந்த இரண்டு மாதங்களில் தமிழ் சினிமாவில் 24 படங்கள் வரை வெளியாகின. அவற்றில் ஒரு படம் கூட வசூல் ரீதியாக வெற்றி பெறவில்லை என்பது திரையுலகை அதிர்ச்சியடைய வைத்தது. விஷால் நடித்து வெளிவந்த 'வீரமே வாகை சூடும்' தோல்வியடைந்தது. விஷ்ணு விஷால் நடித்த 'எப்ஐஆர்' படத்தை வெற்றிப் படம் என சக்சஸ் மீட் வைத்தார்கள்.

இந்நிலையில் கடந்த வாரம் வெளியான 'வலிமை' குறித்து பல்வேறு விதமான விமர்சனங்கள் வெளிவந்தன. ஆனால், படத்தைப் பார்க்க கடந்த ஞாயிறு வரை மக்கள் குடும்பம் குடும்பமாக வந்ததாக தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு தியேட்டர்காரர்கள் தெரிவித்துள்ளனர். 2022ம் ஆண்டின் முதல் பிளாக்பஸ்டர் 'வலிமை' என பல தியேட்டர்காரர்கள் சொல்கிறார்கள். மூன்று நாட்களில் 100 கோடி வசூலையும் படம் கடந்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன. இருப்பினும் நேற்று முதல் இப்படத்தின் வசூல் குறைந்துள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.