உக்ரைன் அதிபரை கொல்ல 400 கூலிப்படையினர் தயார்| Dinamalar

லண்டன்: உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கியை கொல்ல, 400 கூலிப்படையினரை ரஷ்யா அனுப்பியுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

ரஷ்ய பீரங்கிப் படைகள், உக்ரைன் தலைநகர் கீவ்வை நெருங்கி விட்ட நிலையில், பிரிட்டனில் இருந்து வெளியாகும் ‘டைம்ஸ் ஆப் லண்டன்’ பத்திரிகை ஒரு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.

அதில் கூறப்பட்டுள்ளதாவது :ரஷ்ய அதிபர் புடினின் நெருக்கமான நண்பர் யெவ்கெனி பிரிகோசின். இவர், ‘வாக்னர் குழுமம்’ என்ற பெயரில் தனி ராணுவத்தை நிர்வகித்து வருகிறார். இக்குழுமத்தைச் சேர்ந்த 2,000 முதல் 4,000 கூலிப்படையினர், கடந்த ஜனவரியில் பெலாரஸ் வழியாக உக்ரைனுக்குள் புகுந்தனர்.

latest tamil news

இவர்களில், 400 பேர் கீவ் நகரில் நுழைந்துள்ளனர். எஞ்சியோர், ரஷ்யா ஆதரிக்கும் டோனட்ஸ்க், லுஹான்ஸ்க் பிராந்தியங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். கீவ் நகரில் புகுந்துள்ள கூலிப்படையினருக்கு, உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கியை கொல்லும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது.

திட்டத்தை கச்சிதமாக முடித்தால் பல கோடி ரூபிள் உள்ளிட்ட பரிசுகள் தருவதாக கூலிப் படையினருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல், நான்கு தினங்களுக்கு முன்தான் உக்ரைன் உளவுப் படையினருக்கு தெரியவந்தது. வோலோடிமிர் ஜெலன்ஸ்கி, கீவ் நகரில் தான் உள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.