சென்னை மாநகராட்சி கவுன்சிலர்கள் இன்று பதவி ஏற்பு

சென்னை:
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த 19-ந் தேதி நடைபெற்றது. தேர்தல் முடிவுகள் கடந்த 22-ந் தேதி வெளியாகின. 
இந்த தேர்தலில் வெற்றிபெற்ற 12,838 வார்டு கவுன்சிலர்கள் இன்று காலை பதவி ஏற்கிறார்கள் இதற்கான ஏற்பாடுகள் அனைத்து மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் செய்யப்பட்டுள்ளன. 
காலை 9.30 மணிக்கு கவுன்சிலர்கள் பதவி ஏற்பு நிகழ்ச்சி தொடங்குகிறது.
சென்னை மாநகராட்சி கவுன்சிலர் தேர்தலில் தி.மு.க. 153 வார்டிலும், அ.தி.மு.க. 15 வார்டிலும் வெற்றி பெற்றது. 
காங்கிரஸ் 13 வார்டிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தை கட்சி தலா 4 வார்டிலும், ம.தி.மு.க. 2 வார்டிலும், இந்திய கம்யூனிஸ்டு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், பா.ஜ.க., அ.ம.மு.க. தலா ஒரு வார்டிலும் வெற்றி பெற்றுள்ளனர். ஐந்து வார்டுகளில் சுயேச்சைகள் வெற்றி பெற்றுள்ளனர். 
வெற்றி பெற்ற 200 வேட்பாளர்களும் இன்று  தங்களது வார்டுகளின் கவுன்சிலர்களாக பதவி ஏற்கின்றனர். 
இதற்கான நிகழ்ச்சி சென்னை ரிப்பன் மாளிகையில் உள்ள மன்ற கூட்ட அரங்கில் நடைபெறுகிறது
சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி,  கவுன்சிலர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.
இதனையடுத்து நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) சென்னை மாநகராட்சியின் மேயர், துணை மேயரை தேர்வு செய்யும் முறைமுக தேர்தல் நடைபெறுகிறது.
புதிதாக பதவி ஏற்ற கவுன்சிலர்கள் பெருநகர சென்னை மாநகராட்சியின் மேயர் மற்றும் துணை மேயரை தேர்ந்தெடுக்க உள்ளனர். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.