'மாமன்னன்' படத்தில் வடிவேலு : மாரி செல்வராஜ் மகிழ்ச்சி

'பரியேறும் பெருமாள், கர்ணன்' ஆகிய படங்களுக்குப் பிறகு மாரி செல்வராஜ் இயக்கும் 'மாமன்னன்' படம் நேற்று சேலத்தில் ஆரம்பமானது. உதயநிதி தயாரித்து, நாயகனாக நடிக்கும் இப்படத்திற்கு ஏஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். மலையாள நடிகர் பகத் பாசில், கீர்த்தி சுரேஷ் ஆகியோருடன் வடிவேலுவும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இப்படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று டைட்டில் போஸ்டருடன் வெளியானது. அதில் வடிவேலுவின் பெயர்தான் முதலில் இடம் பெற்றுள்ளது. அதற்குப் பிறகே மற்றவர்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.

2011ம் ஆண்டு நடந்த தமிழக சட்டசபை தேர்தலின் போது திமுகவிற்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்டார் வடிவேலு. ஆனால், அந்தத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. அதற்குப் பிறகு பலரும் வடிவேலுவை தங்களது படங்களில் நடிக்க வைக்கத் தயங்கியதாக செய்திகள் வெளிவந்தன.

கடந்த வருடம் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் திமுக வெற்றி பெற்று முக ஸ்டாலின் முதல்வரானர். உடனே, அவரைச் சென்று சந்தித்தார் வடிவேலு. அதற்குப் பிறகு அவருக்கு புதிய படங்களில் நடிக்க வாய்ப்புகள் வரத் தொடங்கின. தற்போது 'நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்' படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் 'மாமன்னன்' படத்தில் வடிவேலு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளது அவருடைய ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாரி செல்வராஜ், ஏஆர் ரஹ்மான், உதயநிதி ஸ்டாலின், பகத் பாசில், கீர்த்தி சுரேஷ் என்ற புதிய வித்தியாசக் கூட்டணியில் வடிவேலுவும் இணைந்திருப்பது இயக்குனர் மாரி செல்வராஜுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வடிவேலுவுடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து, “ஒரு தொடர் கனவு நிறைவடைந்தது. மாமன்னனில் வைகைப்புயல்,” எனப் பதிவிட்டு தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.