கட்சி கட்டுப்பாட்டை மீறியதாக திமுக மகளிரணி நிர்வாகி கட்சியிலிருந்து சஸ்பெண்ட்

திமுக மாநில மகளிர் தொண்டரணி துணைச் செயலாளர் மீனா ஜெயக்குமார் கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளதாக கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ”கோவை மாவட்டத்தைச் சேர்ந்த திமுக மாநில மகளிர் தொண்டர் அணி துணைச் செயலாளர் மீனா ஜெயக்குமார்,
image
கட்சி கட்டுப்பாட்டை மீறி, கட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அண்மையில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பெரும்பாலான வார்டுகளை திமுகவும், அதன் கூட்டணிக் கட்சிகளும் கைப்பற்றின. இதனிடையே, நகர்ப்புற உள்ளாட்சிகளின் தலைவர் மற்றும் துணைத் தலைவர்களுக்கான மறைமுகத் தேர்தல் மார்ச் 4ம் தேதி நடைபெற்றது. இதில் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட சில இடங்களில் திமுகவினர் போட்டி வேட்பாளர்களாக களமிறங்கி வெற்றி பெற்றனர். இதனை சுட்டிக்காட்டி, கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்ததை அடுத்து, இதுபோல் வெற்றி பெற்ற திமுகவினரை பதவியில் இருந்து விலகுமாறு அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டார். அவ்வாறு பதவி விலகாதவர்கள் கட்சியில் இருந்து நீக்கப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
அதன்படி, கடலூர் சட்டப்பேரவை உறுப்பினர் கோ.அய்யப்பன் திமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் தற்காலிகமாக நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதேபோல், பூந்தமல்லி திமுக நகரச் செயலாளர் பதவியில் இருந்து எம்.ரவிக்குமார் தற்காலிகமாக நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும், உசிலம்பட்டியில் 4 திமுக பொறுப்பாளர்கள் தற்காலிக நீக்கம் செய்யப்பட்டனர். அந்த வரிசையில் தற்போது, திமுக மாநில மகளிர் தொண்டரணி துணைச் செயலாளர் மீனா ஜெயக்குமார் கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார். Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.