மேகேதாட்டு அணை விவகாரத்தை அரசியலாக்குவது விவசாயிகளுக்கு நன்மையை தராது: அண்ணாமலை கருத்து

சென்னை: மேகதாட்டு அணை விவகாரத்தை அரசியலாக்குவது விவசாயிகளுக்கு நன்மையை ஏற்படுத்தாது என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: மேகேதாட்டு அணை விவகாரத்தில் கர்நாடக பாஜகவை கண்டித்து அறிக்கை கொடுத்திருக்கும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தங்கள் கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கட்சியை ஏன் கண்டிக்கவில்லை? தொடக்கத்தில் மேகேதாட்டுவில் அணை கட்ட கிளம்பியதே அப்போது இருந்த காங்கிரஸ் ஆட்சிதானே.

கர்நாடக மாநிலத்தில் உள்ள கட்சிகள் அந்த மாநில நலனுக்கு மாறுபாடாக பேச முடியாது. ஆனால், தமிழகம், கர்நாடகா, அகில இந்திய காங்கிரஸ் தலைவர்கள் இந்த விவகாரத்தில் என்னபதில் சொல்கின்றனர்? அவர்களுக்கு வைகோவின் பதில் என்ன?

ஒவ்வொரு மாநிலத்துக்கு தேவையான நலத் திட்டங்களை உருவாக்குவது அந்தந்த மாநிலத்தின் உரிமை. அது பிற மாநிலத்தின் உரிமைகளை பாதிக்காத வண்ணம் பார்த்துக் கொள்ளவேண்டியது மத்திய அரசின் கடமை. உச்ச நீதிமன்றம் அறிவித்தபடி, பருவ காலங்களுக்கு ஏற்ற குறைந்தபட்ச நதிநீர் ஒதுக்கீட்டை தமிழகத்துக்கு கர்நாடக அரசு முழுமையாக தர வேண்டும் என்பதில் தமிழக பாஜக உறுதியாக இருக்கிறது. அதில் ஒரு சொட்டுநீரைக்கூட விட்டுத்தர பாஜக சம்மதிக்காது. மேகேதாட்டு விவகாரத்தை அரசியலாக்குவது கர்நாடக விவசாயிகளுக்கும், தமிழக விவசாயிகளுக்கும் நன்மையை தரப்போவது இல்லை.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.