கல்யாணி பிரியதர்ஷன் பட சூட்டிங்கில் அடிதடி : நடிகர் மீது புகார்

இயக்குனர் பிரியதர்ஷனின் மகள் என்கிற அடையாளத்துடன் சினிமாவில் நுழைந்த கல்யாணி பிரியதர்ஷன் தனது திறமையால் அடுத்தடுத்த பட வாய்ப்புகளை பெற்று வருகிறார். குறிப்பாக சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான மாநாடு, ஹிருதயம் மற்றும் ப்ரோ டாடி உள்ளிட்ட படங்கள் ரசிகர்களின் வரவேற்பை பெற்றதுடன் மிகப்பெரிய லாபமும் ஈட்டி உள்ளன.

இந்த நிலையில் மலையாளத்தில் டொவினோ தாமஸ் ஜோடியாக தல்லுமால படத்தில் நடித்து வருகிறார் கல்யாணி பிரியதர்ஷன். இந்த படத்தில் வில்லன் நடிகர் ஷைன் டோம் சாக்கோவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். கொச்சியில் கலமசேரி பகுதியில் உள்ள ஹெச்எம்டி காலனியில் இதன் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. அந்த பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக படப்பிடிப்பு வாகனங்களை நிறுத்துவதாலும், படக்குழுவினர் குப்பைகளை அந்த பகுதியில் வீசி எறிவதாலும் அந்தப் பகுதி மக்கள் சிலர் அதுகுறித்து படக்குழுவினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஒரு கட்டத்தில் வில்லன் நடிகர் ஷைன் டோம் சாக்கோ அந்த பகுதிவாசிகளுடன் மோதலில் ஈடுபட்டு ஒருவரை தாக்கியதாக கூறப்படுகிறது. அதேபோல படக்குழுவினர் ஒருவர் இந்த சச்சரவில் காயமடைந்துள்ளார் என்றும் சொல்லப்படுகிறது. இருவரும் தற்போது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

காயம்பட்ட அந்த பகுதியை சேர்ந்த நபர், வில்லன் நடிகர் மீது போலீசில் புகார் அளித்துள்ளார். படக்குழுவினர் தரப்பிலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் புகாரை பதிவு செய்யாத போலீசார் இருதரப்பினரையும் சமாதானப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.