ஜலந்தர் அருகே சர்வதேச கபடி வீரர் சுட்டுக் கொலை

ஜலந்தர்:
சர்வதேச கபடி வீரர் சந்தீப் நங்கல், கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக, கனடா, அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் நடைபெற்ற கபடி போட்டிகளில் பங்கேற்றுள்ளார். அந்த கபடிப் போட்டிகளில் கிடைத்த வெற்றி மூலம் அவர் தனிப்பட்ட முறையில் புகழ் பெற்று வந்தார். மேலும் கபடி கூட்டமைப்பை ஒன்றையும் சந்தீப் நிர்வகித்து வந்தார்.
இந்நிலையில் நேற்று பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் அருகே உள்ள மாலியன் கிராமத்தில் நடைபெற்ற கபடி போட்டியின் போது சந்தீப் நங்கல் மீது  அடையாளம் தெரியாத நபர்களால் துப்பாக்கியால் சுட்டனர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.  
தொலைவில் இருந்து அடுத்தடுத்து துப்பாக்கியால் அவர் சுடப்பட்டதால் போட்டியை காண வந்திருந்த பார்வையாளர்கள்  தலைதெறிக்க ஓடினர். உடனடியாக விரைந்து சென்ற போலீசார் விசாரணை மேற்கொண்டனர். 
சந்தீப் நங்கல்  தலை மற்றும் மார்பு பகுதியில் சுமார் 20 ரவுண்டுகள் சுடப்பட்டதாக ஜலந்தர் துணைக் கண்காணிப்பாளர் லக்விந்தர் சிங் தெரிவித்துள்ளார். 
கோல்ஃப் உபகரணங்கள் மற்றும் கூட்டமைப்புடன் சந்தீப் நங்கலுக்கு பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து விசாரணை முடிவில் தெரிய வரும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.