போலந்து எல்லையில் இருந்து 70 கி.மீ. தூரத்தில் உள்ள விமான நிலையத்தை குறிவைத்து ரஷியா ஏவுகணை தாக்குதல்

உக்ரைன் மீது ரஷியா போர் தொடங்கி மூன்று வாரங்கள் நிறைவடைந்துள்ளன. இருந்தாலும், உக்ரைனின் மிகப்பெரிய நகரங்களை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியாமல் ரஷியா திணறுகிறது. அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் வழங்கும் உதவிகளை பெற்றுக்கொண்டு உக்ரைன் எதிர்த்து போரிட்டு வருகிறது.
உக்ரைன் நாட்டில் எல்லா நகரங்களிலும் ரஷியா தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைன் மேற்கு பகுதியில் போலந்து நாட்டின் எல்லையில் இருந்து சுமார் 70 கி.மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது ‘விவ்’ விமான நிலையம். இந்த விமான நிலையம் அருகிலேயே விமானங்கள் பழுது பார்க்கும் ஆலை அமைந்துள்ளது. இதன்மீது ரஷியா இன்று குண்டுகளை வீசியும், ஏவுகணைகளை வீசியும் தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்த தாக்குதலை ‘விவ்’ நகர மேயர் ஆண்ட்ரி சடோவ்யி உறுதிப்படுத்தியுள்ளார். ஆனால், விமான நிலையம் ரஷியாவின் தாக்குதலில் இருந்து தப்பித்துள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார். உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷியா மிகப்பெரிய இழப்பை சந்தித்த போதிலும், போரை நிறுத்த மறுப்பு தெரிவித்துள்ளது.
மக்கள் மீது தாக்குதல் நடத்தி வரும் ரஷியா போர் குற்றவாளி என அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி ஆண்டனி பிளிங்கன் குற்றம்சாட்டியுள்ளார். ஐரோப்பிய நாடுகளும் ரஷியாவை குற்றம்சாட்டி அறிக்கை வெளியிட்டுள்ளன.
உக்ரைனக்கு மேலும் 800 மில்லியன் டாலர் ராணுவ உதவி வழங்குவதாக  அமெரிக்கா அறிவித்துள்ளது. சீனா நேரடியாக ரஷியாவுக்கு ஆயுதங்கள் வழங்க பரிசீலனை செய்து வருவதாகவும் குற்றம்சாட்டியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.