குடும்ப தலைவிக்கு ரூ.1000 வழங்கும் திட்டம்- நிதிநிலை முன்னேற்றம் ஏற்படும்போது செயல்படுத்தப்படும்

சென்னை:

பட்ஜெட்டில் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறி இருப்பதாவது:-

மகளிரின் முன்னேற்றமே மாநிலத்தின் முன்னேற்றம் என்ற கொள்கையின் அடிப்படையில், அவர்களின் நலனுக்காக தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளான ஆவின் பால் விலை குறைப்பு, சுய உதவிக் குழுக்களின் கடன் தள்ளுபடி, அரசுப் பேருந்துகளில் இலவச பயணம் போன்ற பல வாக்குறுதிகளை முதல்-அமைச்சர் ஏற்கனவே நிறைவேற்றியுள்ளார்.

அடுத்த முக்கிய வாக்குறுதியான மகளிருக்கான உரிமைத்தொகை வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் உடனடியாக எடுக்கப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.

சென்ற ஆட்சியினர் விட்டுச்சென்ற நிதி நெருக்கடி சூழல் காரணமாக இந்த வாக்குறுதிகளை இந்த அரசின் முதல் ஆண்டில் செயல்படுத்துவது கடினமாக இருந்து வருகிறது.

இருப்பினும் இத்திட்டத்தின் கீழ் பயனடைய தகுதியுள்ள பயனாளிகளை பல்வேறு தரவுகளின் அடிப்படையில் கண்டறிந்து பயன்கள் அவர்களை சரியாக சென்றடையும் வகையில் திட்டத்தை வடிவமைப்பதற்கான பணிகள் முழு முனைப்புடன் நடைபெற்று வருகின்றன என்பதை இந்த பேரவைக்கு தெரிவிக்க விரும்புகின்றேன்.

இதன் அடிப்படையில், இந்த அரசு எடுத்து வரும் பல்வேறு முயற்சிகளின் காரணமாக நிதிநிலையில் முன்னேற்றம் ஏற்படும்போது இத்திட்டம் செயல்படுத்தப்படும் என உறுதியளிக்கிறேன்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.