பஞ்சாப் மாநிலத்தில் ஒருபெண் உள்பட 10 பேர் இன்று அமைச்சர்களாக பதவி ஏற்றனர்…

சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தில் ஒருபெண் உள்பட 10 பேர் இன்று அமைச்சர்களாக பதவி ஏற்றனர். பகவந்த் மான் அமைச்சரவை பதவியேற்பு விழா பஞ்சாப் ராஜ்பவனில் நடைபெற்றது. புதிய அமைச்சர்களுக்கு  ஆளுநர் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

நடைபெற்று முடிந்த பஞ்சாப் மாநில சட்டமன்ற தேர்தலில் ஆம்ஆத்மி கட்சி பெரும் வெற்றி பெற்றது. 117 சட்டசபை தொகுதிகளுக்கு நடந்து முடிந்த தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 92 தொகுதி களை வென்று தனி பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியை பிடித்துள்ளது. இதையடுத்து, முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பகவந்த் மான் கடந்த 16ஆம் தேதி  பஞ்சாப் மாநில முதல்வராக ஆளுநர் மாளிகையில் பதவியேற்றுக் கொள்ளாமல் அவர் சுதந்திர போராட்ட தியாகி பகத் சிங்கின் சொந்த ஊரான கட்கார் காலனில் பதவியேற்றார்.

இதையடுத்து இன்று 10பேர் கொண்ட அமைச்சரவை பதவி ஏற்றது. அதன்படி ஒரு பெண் அமைச்சர் உள்பட 10 பேர் அமைச்சர்களாக பதவி ஏற்றனர். அவர்களுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

பஞ்சாப் மாநில அமைச்சர்கள் விவரம்:

முதலமைச்சர் –  பகவந்த் மான்

1.ஹர்பால் சிங் சீமா

2.டாக்டர் பல்ஜித் கவுர் (பெண் அமைச்சர்)

3.ஹர்பஜன் சிங் ஈடிஓ

4.டாக்டர் விஜய் சிங்லா

5.லால் சந்த் கடாருச்சக்

6.குர்மீத் சிங் மீட் ஹாயர்

7.குல்தீ சிங் தலிவால்

8.லால்ஜித் சிங் புல்லர்

9.பிராம் சங்கர் (ஜிம்பா)

10.ஹர்ஜோத் சிங் பைன்ஸ்

ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்றனர். அதையடுத்து அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.

முன்னதாக   முதல்வர் பகவந்த் மான் பதிவிட்ட டிவிட்டில்,  இன்று அமைச்சர்களாக பதவியேற்போருக்கு எனது வாழ்த்துகள். மாநிலத்தின் மக்களுக்காக இந்த அமைச்சரவை கடுமையாக பணியாற்ற வேண்டும். பஞ்சாபில் நேர்மையான அரசு நிர்வாகத்தை மக்களுக்கு வழங்குவோம் என உறுதியேற்க வேண்டும் என கூறிய மான், 10 அமைச்சர்களின் பட்டியலையும் வெளியிட்டுள்ளார்.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.