பகவந்த் மான் அமைச்சரவையில் முக்கிய எம்.எல்.ஏ.க்களுக்கு வாய்ப்பு இல்லை

சண்டிகர்:
பஞ்சாப் மாநில சட்டசபைத்  தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. முதல்வராக பகவந்த் மான் பதவியேற்றார். இன்று அவரது அமைச்சரவை பதவியேற்றது. அமைச்சரவையில் 10 பேர் இடம்பெற்றுள்ளனர். இவர்களில் ஹர்பால் சீமா, குர்மீத் சிங் தவிர மற்ற 8 பேரும் முதல்முறையாக வெற்றி பெற்று எம்எல்ஏ ஆனவர்கள்.
எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த முக்கிய தலைவர்களை தேர்தலில் தோற்கடித்த பலருக்கு அமைச்சரவையில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. அவர்களில் லப் சிங் உகோகே, குர்மீத் சிங் குட்டியன் ஆகியோர் முக்கியமானவர்கள்.
லப் சிங் உகோகே பகதூர் தொகுதியில் முன்னாள் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னியை 37,558 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தவர். இதேபோல் குர்மீத் சிங், சிரோமணி அகாலி தளம் தலைவர் பிரகாஷ் சிங் பாதலை அவரது பாரம்பரிய லம்பி தொகுதியில் 11396 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
உகேகே செல்போன் பழுதுபார்க்கும் கடை வைத்துள்ளார். குர்மீத் சிங் குட்டியன், கடந்த ஆண்டு காங்கிரசில் இருந்து ஆம் ஆத்மி கட்சியில் இணைந்தவர்.
இதேபோல் முன்னாள் பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து மற்றும் சிரோமணி அகாலி தளம் தலைவர் பிக்ராம் சிங் மஜிதியா ஆகியோரை தோற்கடித்த சமூக ஆர்வலர் ஜீவன்ஜோதி கவுருக்கும் அமைச்சரவையில் வாய்ப்பு வழங்கப்படவில்லை.
ஆம் ஆத்மி வேட்பாளர் அஜித் பால் சிங் கோலி, இரண்டு முறை முதலமைச்சராக இருந்த அமரீந்தர் சிங்கை பாட்டியாலா நகர்ப்புற தொகுதியில் தோற்கடித்தார். ஜக்தீப் கம்போஜ் ஜலாலாபாத்தில் சிரோமணி அகாலி தளம் தலைவர் சுக்பீர் சிங் பாதலை தோற்கடித்தார். 
இதுதவிர அமன் அரோரா, பல்ஜிந்தர் கவுர், சர்வ்ஜித் கவுர் மனுகே உள்பட இரண்டுமுறை எம்எல்ஏக்களாக இருந்தவர்களும் அமைச்சரவையில் இடம்பெறவில்லை. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.