பெரியார் மண்ணில் இந்த படத்திற்கு அனுமதி இல்லையா? பெண் இயக்குனர் கண்ணீர்

Some people prevent to release movie, Kallan movie director Chandra emotional speech: கரு பழனியப்பன் நடிப்பில் வெளியாகியுள்ள கள்ளன் படத்தை, குறிப்பிட்ட சமூகத்தினர் திரையிட விடாமல் தடுக்கிறார்கள் என அந்த படத்தின் இயக்குனர் சந்திரா கண்ணீருடன் கூறியுள்ளார்.

பிரபல இயக்குனர் கரு.பழனியப்பன் நடித்துள்ள திரைப்படம் கள்ளன். இந்தப் படத்தை எழுத்தாளர் சந்திரா இயக்கியுள்ளார். தற்போது இந்த படம் பிரச்சனைகளை சந்தித்து வருகிறது. காரணம் இப்படத்தின் பெயர். இந்த படத்தின் தலைப்பு குறிப்பிட்ட சமூகத்தை களங்கப்படுத்துவதாக, உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது.

இந்நிலையில் இன்று படம் வெளியாவதாக இருந்த நிலையில், தியேட்டர்களுக்கு குறிப்பிட்ட சமுகத்தை சேர்ந்தவர்களால் மிரட்டல் வந்ததையடுத்து, தியேட்டர் நிர்வாகம் படத்தை திரையிட மறுத்துவிட்டது.

இதனையடுத்து இந்த படத்தின் தயாரிப்பாளர் மதியழகன், இயக்குனர் சந்திரா தங்கராஜ் இருவரும் உடனடியாக பத்திரிகையாளர்களை சந்தித்து பேட்டி அளித்திருக்கிறார்கள்.

அதில் தயாரிப்பாளர் மதியழகன், சம்பந்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த கவுன்சிலர்கள் படத்தைப் பார்த்த பிறகு, கஷ்டப்பட்டுப் பேசி முடிவு செய்த பிறகே இன்று ரிலீஸ் செய்தேன். ஆனால், சில ஜாதி வெறி பிடித்தவர்கள் பட போஸ்டரை கிழித்து எறிந்து, அந்த புகைப்படங்களை தங்களது வாட்ஸ்அப் ஸ்டேடஸ்ஸில் வைத்து அதை பிறருக்கும் பரப்பி வருகிறார்கள். அதில், நாங்கள் எத்தனை திரையரங்குகளில் படத்தை நிறுத்தி விட்டோம் என்பதை பாருங்கள் என்று பெருமையாகவும் பதிவு செய்திருக்கிறார்கள்.

150 திரையரங்குகளில் வெளியாக இருந்த நிலையில், தற்போது 75 திரைகளில் தான் இந்த படம் ஓடுகிறது. நாங்கள் சம்பந்தப்பட்ட ஜாதியை சேர்ந்தவர்கள் கேட்டபடி மன்னிப்பு கடிதம் கொடுத்துள்ளோம். ஆனாலும், அவர்கள் படத்தை வெளியிட அனுமதிக்க வில்லை. தயாரிப்பாளர் சங்கத்தில் பொறுப்பில் இருப்பவர்களும் இந்த விஷயத்தில் எங்களுக்காக குரல் கொடுக்க தயாராக இல்லை. அவர்கள் குறிப்பிட்ட ஜாதியினரை பகைத்துக் கொள்ள தயாராக இல்லையாம். இதனால் எங்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஓடிடி தளங்களுக்கு இனிமேல் படங்களை கொடுத்து விடலாம் என்று நினைக்க தோன்றுகிறது என்று மனவருத்தத்துடன் பேசியிருந்தார்.

இதையும் படியுங்கள்: விஜய் வாய்ஸில் மற்றொரு பாசிட்டிவ் பாடல்; பீஸ்ட் பட ஜாலியோ ஜிம்கானா பாடலுக்கு ரசிகர்கள் வரவேற்பு

பின்னர் பேசிய இயக்குனர் சந்திரா, நானும் அதே ஜாதியை சேர்ந்தவள் தான். திருடன் என்பதற்கு நேரான தமிழ்ச் சொல் தான் கள்ளன். இது ஒன்றும் ஜாதி பெயர் இல்லை. மலைக் கள்ளன், கள்ளன், பவித்ர கள்ளன் என்று மலையாளத்தில் கூட பல படங்கள் வந்துள்ளன. அது வெறும் டைட்டில் மட்டும் தான். கள்வர் என ஏற்கனவே பெயர் இருந்ததால் தான் நான் கள்ளன் என பெயர் வைத்தேன். இது பெரிய நடிகரின் படம் இல்லை. நான் படத்தின் பெயரை மாற்றினால் மக்களுக்கு அது உடனே போய் சேராது. ஆனால், இதை புரிந்து கொள்ளாமல் கள்ளர் ஜாதியை சேர்ந்தவர்கள் தான் எங்களுக்கு மிரட்டல் விடுகிறார்கள். என்னுடைய புகைப்படத்தை எடிட்டிங் செய்து ஆபாசமாக வெளியிட்டுள்ளனர். முக்கியமாக வாண்டையார் என்னும் நபர் தான் என்னுடைய தொலைபேசி எண்ணை கள்ளர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கு கொடுத்துள்ளார். ஒரு சிலர் என்னை தொடர்பு கொண்டார்கள். பின் நான் சொன்ன கருத்துக்களை அவர்கள் ஏற்றுக் கொண்டார்கள்.

18 வருடங்களாக நான் உழைத்த உழைப்பு எல்லாம் வீணாய் போய் விட்டது. எனது ஊரில் உள்ள இரண்டு திரையரங்குகளிலும் படம் வெளியாகவில்லை. இந்த இக்கட்டான நேரத்தில் தமிழக முதல்வருக்கு ஒரு வேண்டுகோளை முன்வைக்கிறேன். இந்த செயலுக்கு நீங்கள் தக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் தமிழகம் மீண்டும் ஜாதி வெறி பிடித்த மாநிலமாக மாறும். இது பெரியாரின் மண். பெண் பிள்ளைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நீங்கள் தக்க நடவடிக்கை எடுத்து இந்த படத்திற்கு மட்டும் இல்லை இனிமேல் வரும் எந்த படத்திற்கும் ஜாதி பிரச்சனை வராமல் பார்த்துக்கொள்ளுங்கள். இந்த பிரச்சனையில் பத்திரிகையாளர்களும் எங்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று கண்ணீருடன் வேண்டுகோள் விடுத்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.