உக்ரைனில் உயிரிழந்த மாணவர்: சோகத்திலும் தந்தை எடுத்த செம முடிவு!

உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷ்யா தொடர் தாக்குதலை நடத்தி வருகிறது. இதனால், ஏராளமான பொதுமக்கள் உயிரிழந்து வருகின்றனர். அந்த வகையில், ரஷ்ய படைகள் நடத்திய தாக்குதலில் உக்ரைனுக்கு மருத்துவம் படிக்க சென்ற கர்நாடக மாநிலம் தாவணகெரேவை சேர்ந்த‌ மருத்துவக் கல்லூரி மாணவர்
நவீன்
கடந்த 1ஆம் தேதி கொல்லப்பட்டார்.

ரஷ்ய தாக்குதலால் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு தளர்த்தப்பட்ட போது, அவர் உணவு பொருட்கள் வாங்க வெளியே சென்றுள்ளார். அப்போது நடத்தப்பட்ட தாக்குதலில் அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் நடவடிக்கைகளை மத்திய அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருவதற்கிடையே மாணவர் நவீனின் உயிரிழப்பு சோகத்தை ஏற்படுத்தியது.

கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, நவீனின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் நிவாரணமாக ரூ.25 லட்சம் வழங்கினார். இதையடுத்து நவீனின் உடலை சொந்த ஊருக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரது தந்தை சேகரப்பா, பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர், வெளியுறவுத்துறை அமைச்சர் உள்ளிட்டோருக்கு கோரிக்கை வைத்தார். போர் பதற்றம் குறைந்ததும் அவரது உடலை கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில், உக்ரைனில் உயிரிழந்த மாணவர் நவீனின் உடல் விமானம் மூலம் வருகிற 21ஆம் தேதி (நாளை) பெங்களூரு கொண்டு வரப்படுவதாகவும், அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் அவரது சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்படுவதாகவும் மத்திய வெளியுறவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த தகவலை கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மையும் உறுதி படுத்தியுள்ளார்.

இதுகுறித்து மாணவரின் தந்தை சேகரப்பா கூறுகையில், “எனது மகனின் இழப்பை இன்னும் எங்களால் கடந்துவர முடியவில்லை. கடைசியாக ஒரு முறை அவனது முகத்தை பார்க்க வேண்டும் என ஏங்குகிறோம். திங்கள்கிழமை எங்கள் வீட்டில் இறுதிச் சடங்கு செய்த பிறகு நவீனின் உடலை எஸ்.எஸ். மருத்துவக் கல்லூரிக்கு அளிக்க இருக்கிறோம். என் மகன் எம்பிபிஎஸ் படித்து மருத்துவத் துறையில் சாதிக்க விரும்பினான். இறந்த பிறகும் ம‌ருத்துவத் துறைக்கு பயன்படட்டும் என அவனது உடலை தானம் செய்கிறோம்.” என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.