இந்தியாவில் 2 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்த கொரோனா தினசரி பாதிப்பு

புதுடெல்லி:

சீனா உள்ளிட்ட சில நாடுகளில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் இந்தியாவில் புதிய பாதிப்பு 2 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது.

இன்று காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,761 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தினசரி பாதிப்பு விகிதம் 0.41 சதவீதமாகவும், வாரந்திர பாதிப்பு விகிதம் 0.41 சதவீதமாகவும் பதிவாகி உள்ளது. மொத்த பாதிப்பு 4 கோடியே 30 லட்சத்து 7 ஆயிரத்து 841 ஆக உயர்ந்தது.

கொரோனா பாதிப்பால் மேலும் 127 பேர் இறந்துள்ளனர். இதில் கேரளாவில் விடுபட்ட மரணங்கள் மட்டும் 118 பேர் அடங்குவர். இதனால் இதுவரை பலியானோர்கள் எண்ணிக்கை 5,16,479 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 3,196 பேர் குணமாகி வீடு திரும்பினர். இதுவரை குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 24 லட்சத்து 65 ஆயிரத்து 122 ஆக உயர்ந்துள்ளது. இதன்மூலம் குணம் அடைந்தோர் மொத்த சதவீதம் 98.74 ஆக உயர்ந்துள்ளது.

தற்போது சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை 26,240 ஆக சரிந்துள்ளது. இது நேற்று முன்தினத்தை விட 1,562 குறைவு ஆகும்.

நாடு முழுவதும் நேற்று 15,34,444 டோஸ்களும், இதுவரை 181 கோடியே 21 லட்சம் டோஸ் தடுப்பூசிகளும் மக்களுக்கு போடப்பட்டுள்ளது.

இதற்கிடையே நேற்று 4,31,973 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. மொத்த பரிசோதனை எண்ணிக்கை 78.26 கோடியாக உயர்ந்துள்ளது.

இதையும் படியுங்கள்… இந்தியாவில் ரூ.3.20 லட்சம் கோடி முதலீடு செய்யப்படும்- ஜப்பான் பிரதமர் உறுதி

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.