நடிகர் சங்க தேர்தல் ஓட்டு எண்ணிக்கை துவக்கம் : வெல்லப்போவது யார்

சென்னை : மூன்றாண்டுகளுக்கு முன் நடத்தப்பட்ட நடிகர் சங்க தேர்தலில் பதிவான ஓட்டுகள் எண்ணிக்கை இன்று(மார்ச் 20) துவங்கி உள்ளது. சில சலசலப்புக்கு இடையே ஓட்டு எண்ணிக்கை நடைபெறுகிறது. மாலைக்குள் யார் வெற்றி பெற்றார்கள் என அறிவிப்பு வெளியாகி விடும். முதற்கட்ட தகவலில் நாசர், விஷால் அணியினர் முன்னிலையில் இருப்பதாக தெரிகிறது. கூடுதல் ஓட்டுகள் பதிவாகி இருப்பதாக கூறி பாக்யராஜ் அணியினர் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தனர்.

வழக்கு
கடந்த 2019ம் ஆண்டு ஜூன் 23ம் தேதி தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் கே.பாக்யராஜ் தலைமையில் ஒரு அணியினரும், நாசர் தலைமையில் ஒரு அணியினரும் போட்டியிட்டனர். ஆனால் தேர்தலை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தேர்தலை செல்லாது என்ற அறிவித்த நீதிமன்றம் வாக்கு எண்ணிக்கைக்கும் தடை விதித்தது. இதை தொடர்ந்து இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சவுத் இந்தியன் வங்கி கிளை பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்பட்டுள்ளன.

தேர்தல் செல்லாது என்ற தீர்ப்பை எதிர்த்து நாசர், விஷால், கார்த்தி ஆகியோர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை தொடர்ந்து நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் தேர்தல் செல்லும் என்று அறிவித்து வாக்குகளை எண்ணவும் உத்தரவிட்டது. இதை எதிர்த்து ஏழுமலை என்ற துணை நடிகர் உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டது.

மூன்றாண்டுகளுக்கு பின் ஓட்டு எண்ணிக்கை
இந்த நிலையில் இன்று (மார்ச் 20) சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள குட் ஷெப்பர்ட் பள்ளி வளாகத்தில் ஓட்டு எண்ணிக்கை நடைபெறுகிறது. இந்த ஓட்டு எண்ணிக்கை தேர்தல் அதிகாரி, நடிகர் சங்க தனி அதிகரி மற்றும் போட்டியிட்ட வேட்பாளர்களின் பிரதிநிதிகள் முன்னிலையில் எண்ணப்படுகிறது. இதற்காக பலத்த போலீஸ் பாதுகாப்பும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

குற்றச்சாட்டு
முன்னதாக ஓட்டு எண்ணிக்கை துவங்க பாக்யராஜ் தலைமையிலான அணியினர் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தனர். காரணம் ஓட்டு பதிவான நாளின் போது எவ்வளவு ஓட்டுகள் பதிவானது. இப்போது எவ்வளவு ஓட்டுகள் உள்ளது என்பதை அறிவித்த பின்னர் ஓட்டு எண்ணிக்கையை துவங்கும் படி கேட்டனர். மேலும் பதிவான ஓட்டுகளை விட கூடுதலாக இப்போது ஓட்டு எண்ணிக்கை உள்ளது என இவர்கள் குற்றம் சாட்டினர். இதனால் எண்ணிக்கை நடைபெறும் இடத்திலிருந்து வெளியேறினர். இதனால் ஓட்டு எண்ணிக்கை சிறிதுநேரம் நிறுத்தி வைக்கப்பட்டது.

மாலைக்குள் முடிவு
பின்னர் நீதிபதி தலையிட்டு பிரச்னையை தீர்த்து வைத்தார். இதையடுத்து ஓட்டு எண்ணிக்கை மீண்டும் துவங்கியது. முதற்கட்ட தகவலில் நாசர், விஷால் தலைமையிலான அணியினர் முன்னணியில் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மாலைக்குள் முடிவுகள் வரும் என தெரிகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.