ஆற்றில் சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்தில் ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சியில் இருந்து திருக்காட்டுப்பள்ளிக்கு ஈச்சர் வாகனமொன்று சரக்கு ஏற்றி வந்து கொண்டிருந்தது. ஆற்றுப் பாலம் அருகே வந்து கொண்டிருந்தபோது பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று அந்த சரக்கு வாகனம் மீது மோதியது.
இதில் சரக்கு வாகனம் ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சரக்கு வாகனத்தில் ஓட்டுநர் மைதீன்கான் அந்த வாகனத்தில் பயணித்த அசோகன், கருப்புசாமி, நிசார் அகமது , சக்தி ஆகியோர் காயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
தலைகுப்புற விழுந்த வாகனத்தை ஜேசிபி மூலம் மீட்கும் முயற்சியில் காவல்துறையினர் ஈடுபட்டனர். அப்போது கார்த்திக் என்பவர் வாகனத்தில் அடியில் சிக்கி பரிதாபமாக உயிர் இழந்தார்.
அவரின் உடலை மீட்ட காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.