இண்டியன்வெல்ஸ் டென்னிஸ்; மகளிர் இரட்டையர் போட்டியில் சீன வீராங்கனைகள் சாம்பியன்

கலிபோர்னியா,
பி.என்.பி.பரிபாஸ் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டிகள் அமெரிக்காவின் இண்டியன்வெல்சில் நடந்து வருகின்றன.  இதில் மகளிர் இரட்டையர் இறுதி போட்டியில், அமெரிக்காவை சேர்ந்த ஆசியா முகமது மற்றும் ஜப்பானை சேர்ந்த எனா ஷிபஹாரா இணையை எதிர்த்து சீனாவை சேர்ந்த சூ யிஃபான் மற்றும் யாங் ஜாவோசூவான் என்ற இணை விளையாடியது.

முதல் செட்டில் 5-2 என்ற புள்ளி கணக்கில் முகமது மற்றும் ஷிபஹாரா இணை முன்னிலையில் இருந்தது.  ஆனால், சீன இணை அதிரடியாக விளையாடி 7-5 என்ற புள்ளி கணக்கில் வெற்றியை தன்வசப்படுத்தியது.
2வது செட்டை கைப்பற்றுவதிலும் இரு தரப்பிலும் கடுமையான போராட்டம் இருந்தது.  இதனால், வெற்றியை முடிவு செய்வதில் இழுபறி ஏற்பட்டது.  எனினும், 7-6(4) என்ற கணக்கில் 2வது செட்டையும் கைப்பற்றி சீன வீராங்கனைகள் வெற்றியை பதிவு செய்தனர்.
ஒரு மணிநேரம் மற்றும் 43 நிமிடங்கள் நடந்த இந்த போட்டியில், கடுமையாக போராடி 7-5, 7-6(4) என்ற செட் கணக்கில் சீன வீராங்கனைகள் சாம்பியன் பட்டம் வென்றுள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.