என்று முடியும் காவிரி போராட்டம்?:- பேரவையில் அமைச்சர் துரைமுருகன் வேதனை

சென்னை:

தமிழக சட்டசபையில் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக  தனித்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தீர்மானத்தை முன்மொழிவதற்கு முன் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் காவிரி பிரச்சனை குறித்து பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

* என்று தனியும் இந்த சுந்திர தாகம் என்று பாரதி பாடியது போல், என்று முடியும் இந்த காவிரி போராட்டம்? என்ற வேதனையோடு மேகதாது அணைக்கு எதிராக தனித்தீர்மானத்தை மாமன்ற உறுப்பினர்கள் ஒப்புதலுக்காக கொண்டு வருகிறேன்.

* போராட்டம் நீண்ட காலமாக நடந்து கொண்டிருக்கிறது. முடியும் நிலை வரவில்லை.  ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு அவதாரத்தை எடுக்கிறது. காவிரியில் வரும் தண்ணீர் தமிழகத்திற்கு உரிமை உண்டு என்ற ஒப்பந்தம் இருந்தாலும், ஒப்பந்தம் முடிந்து விட்டது என்று போராட்டத்தை துவக்கியது கர்நாடக அரசு.

* இல்லை என அதற்கான காரணத்தை கூறி நாம் அதை முறியடித்தோம்.

*  தண்ணீர் பிரச்சினையை தீர்க்க டிரிபுனல் அமைக்க முடிவும் செய்தோம். அதற்கும் முட்டுக்கட்டை போட்டோம். அதையும் முறியடித்தோம்.

* இடைக்கால தீர்ப்புக்கும் முட்டுக்கட்டை. அதையும் வென்றோம்.

* ஆணையம் போட வேண்டும் என்றோம். அதையும் தேவையில்லை என்றார்கள். அதையும் வென்று காட்டினோம்.

* தீர்ப்பு வந்தது. அதை கெஜட்டில் போடமாட்டோம் என்றார்கள். போராடி அதையும் போட வைத்தோம்.

* காவிரி ஆணையம், அதற்கான தலைவர்கள் என ஒவ்வொரு முறையும் போராடினோம்.

* இந்த பிரச்சினை மகன், பேரன், கொள்ளுப்பேரன் என போகுமோ என்று பார்க்கிறேன். எதிர்க்கும் சக்தி, வீரியம் இருப்பதாக சந்தேகப்படுகிறேன். காரணம் எதையும் எதிர்ப்பதாக இருக்கிறார்கள்.

*   சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்குப் பிறகு கூட அணைக் கட்டப் போகிறோம் என்கிறார்கள். இது புதிதல்ல, குண்டு ராவ் கூட அணைக் கட்ட போகிறோம். யாரையும் கேட்க தேவையில்லை என்றார்.

* குமாரசாமி, எடியூரப்பா என எல்லோரும் ஒரே அணியில் இருக்கிறார்கள். அது காங்கிரஸாக இருந்தாலும் சரி, பா.ஜனதாவ இருந்தாலும் சரி, எந்த கட்சியாக இருந்தாலும் ஒரே நிலையில் இருக்கிறார்கள்.  

* தமிழக சட்டசபையில் எல்லா கட்சிகளும் ஒற்றுமையாக உள்ளோம். காவிரி பிரச்சினையில் யார் யோக்கியேன் என்பதை விட்டுவிட வேண்டும் என்பதை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அமைச்சர் துரைமுருகன் பேசினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.