இந்தியாவிலேயே அதிக ஏ.டி.எம் ; தமிழகம் டாப்| Dinamalar

புதுடில்லி: இந்தியாவிலேயே அதிக ஏ.டி.எம்.,களை கொண்டுள்ள மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தில் உள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கிக் கணக்கில் இருந்து எந்த நேரத்திலும் எளிதாக பணம் எடுப்பதற்கு வசதியாக ஏ.டி.எம் கொண்டுவரப்பட்டது. இது வங்கி வாடிக்கையாளர்களுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதம் என்றே சொல்லலாம். தற்போது ஏ.டி.எம் மெஷின்களிலேயே நிறைய வசதிகள் வந்துவிட்டன. பணம் எடுப்பது மட்டுமல்லாமல், பணம் போடுவது, பணம் பரிமாறுவது உள்ளிட்ட வசதிகளும் இடம் பெற்றுள்ளன. மேலும், இந்த ஏ.டி.எம் மெஷின்கள் வங்கி அருகில் மட்டுமின்றி, பெரும்பாலான முக்கிய இடங்களிலும் அந்தந்த வங்கிகள் சார்பில் நிறுவப்பட்டுள்ளன.

இந்நிலையில், இந்தியாவிலேயே அதிக ஏ.டி.எம்.,களை கொண்ட மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தில் உள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இது குறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள தகவலின்படி, 2021 டிசம்பர் மாதத்தில் எடுத்த கணக்கெடுப்பின்படி தமிழகம் 28,540 ஏ.டி.எம்.,களுடன் அதிக ஏ.டி.எம்.,களை கொண்ட மாநிலங்களில் முதலிடம் வகிக்கிறது. இரண்டாமிடத்தில் மஹாராஷ்டிரா (27,945), மூன்றாமிடத்தில் உத்தரபிரதேசம் (23,460) உள்ளது. கர்நாடகா (19,613), மேற்குவங்கம் (13,565), குஜராத் (12,699), ஆந்திரா (12,357), தெலுங்கானா (11,910), ராஜஸ்தான் (11,296), கேரளா (11,054) ஆகிய மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.