பங்கு வெளியீடுகளை தேர்வு செய்வது எப்படி?| Dinamalar

பொது பங்கு வெளியீடுகளில் முதலீடு செய்வது என்று வரும் போது, முதலீட்டாளர்கள் வழக்கமான தவறுகளை தவிர்ப்பது அவசியம்.

பங்கு முதலீட்டில் மட்டும் அல்லாமல், ஐ.பி.ஓ., எனப்படும் பொது பங்கு வெளியீடுகள் மீதான ஆர்வம் அதிகரித்திருக்கிறது. அண்மை காலமாக வர்த்தக நிறுவனங்கள் முதல் முறையாக சந்தையில் நுழைந்து பங்குகளை வெளியிடுவதும் அதிகரித்துள்ளது. மூலதன சந்தையில் ஏற்பட்டிருக்கும் இந்த ஆர்வத்திற்கு ‘பேடிஎம், ஜொமேட்டோ’ உள்ளிட்ட நிறுவன பங்கு வெளியீடுகளை உதாரணமாக சொல்லலாம். அடுத்ததாக எல்.ஐ.சி., பங்கு வெளியீடு நிகழ இருப்பதும் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த பின்னணியில், பங்கு வெளியீடுகளை தேர்வு செய்யும் போது முதலீட்டாளர்கள் மனதில் கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்களை பார்க்கலாம்.

வழக்கமான தவறுகள்

பங்கு வெளியீடு என்று வரும் போது பெரும்பாலான முதலீட்டாளர்கள் வழக்கமான தவறுகளையே மீண்டும் மீண்டும் செய்வதாக வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர். உதாரணமாக, பங்கு வெளியீடு அலை வீசும் போது, பிரபலமாக விளங்கும் போக்கு சார்ந்த நிறுவனங்களில் முதலீடு செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். கடந்த ஆண்டு தொழில்நுட்பம் சார்ந்த புது யுக நிறுவனங்கள் எனும் போக்காக இது அமைந்தது. ஆனால், இந்த நிறுவனங்களின் எல்லாவற்றின் பங்குகளும் பலன் அளித்துவிட வில்லை என்பதை கவனிக்க வேண்டும்.

பேடிஎம் தாய் நிறுவனம் ஒன் 97 கம்யூனிகேஷன்ஸ் பங்குகள் அதன் வெளியீட்டு விலைக்கு மூன்றில் இரண்டு பங்காக சரிந்திருக்கிறது.

‘கார் டிரேட் டெக், பி.பி., பிண்டெக்’ உள்ளிட்ட நிறுவன பங்குகள் வெளியீட்டு விலைக்கு குறைவாக வர்த்தகம் செய்யப்படுகின்றன. இந்த நிறுவனங்களின் பங்குகள் செயல்பாட்டிற்கான காரணங்கள் வேறுபட்டாலும், சந்தை போக்கை மட்டுமே மனதில் கொண்டு முதலீடு செய்வது தவறு என்பதை மனதில் கொள்ள வேண்டிய அம்சம். நிறுவன வர்த்தகத்தின் அடிப்படை அம்சங்களின் பலத்தின் அடிப்படையிலேயே பங்குகள் விலை அமைகின்றன.

எனவே பங்கு வெளியீட்டை தேர்வு செய்யும் போது, குறிப்பிட்ட நிறுவனத்தின் வர்த்தக மாதிரியின் அடிப்படை, போட்டி சூழல் போன்ற அம்சங்களை பரிசீலிக்க வேண்டும். புது யுக நிறுவனங்களின் சந்தை மதிப்பு மற்றும் வர்த்தக மாதிரி புரிந்து கொள்ள சிக்கலானவை என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

குறுகிய ஆதாயம்

முதலீடு செய்யும் நிறுவனங்களின் வர்த்தக மாதிரி தங்களுக்கு புரிகிறதா என்பதில் முதலீட்டாளர்கள் தெளிவாக இருக்க வேண்டும். இதற்காக வல்லுனர்களின் ஆலோசனையை நாடலாம்.
கடந்த ஆண்டு பட்டியலிடப்பட்ட நிறுவனங்களில் துாய தொழில்நுட்பம் சார்ந்த நிறுவனங்கள் நல்ல பலனை அளித்துள்ளன. நீடித்த நிலையான வளர்ச்சி என்பது அனைத்து துறைகளிலும் வலியுறுத்தப்படும் கருத்தாக்கமாக இருப்பதால், துாய தொழில்நுட்பத்திற்கான தேவை அதிகம் இருக்கிறது.

அதே போல, பங்குகள் பட்டியலிடப்பட்ட பின் வெளியேறுவதால் கிடைக்கும் லாபத்தில் பலன் அளிக்க வேண்டும் என்பர் இடர் மிக்க யுக்தியாக அமைகிறது. பங்குகளில் முதலீடு செய்வதற்கான காரணத்தை தெளிவாக அறிந்திருக்க வேண்டும். முதலீடுகள் இலக்கு சார்ந்து அமைய வேண்டும்.

பங்கு வெளியீடுகளை ஆய்வு செய்து தரமான பங்குகளில் நீண்ட கால நோக்கில் முதலீடு செய்வது ஏற்றதாக இருக்கும் என கருதப்படுகிறது. முக்கியமாக பங்கு வெளியீடு என்பது எல்லோருக்குமானது அல்ல என்பதையும் உணர வேண்டும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.