கணவர் எம்எல்ஏ ஆனதால் கோபம் விவாகரத்து கேட்டு கோர்ட்டுக்கு போன பாஜக மாஜி அமைச்சர்

லக்னோ: தனது கணவர் எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டதால் கோபமடைந்த முன்னாள் பாஜக அமைச்சர், தற்போது விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தை நாடி உள்ளார். உத்தரபிரதேசத்தில் மீண்டும் பாஜக ஆட்சியை பிடித்த நிலையில், அம்மாநில முன்னாள் அமைச்சர் ஸ்வாதி சிங்கின் கணவர் தயா சங்கர் சிங் பல்லியா சதர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றிப் பெற்றார். தேர்தலில் ஸ்வாதி சிங்கிற்கு வாய்ப்பு அளிக்காததற்கு, தனது கணவர் தான் காரணம் என்று ஸ்வாதி சிங் கூறிவந்தார். மேலும், கடந்த சில ஆண்டாகவே தம்பதிகளுக்குள் கருத்து வேறுபாடு இருந்து வருகிறது. ஏற்கனவே இருவரும் விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். நீதிமன்ற விசாரணையின் போது இருவரும் சரியாக ஆஜராகாததால் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில் தனது முந்தைய மனுவை விசாரிக்கக் கோரி ஸ்வாதி சிங் தரப்பில் மீண்டும் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. அவரது மனு மீதான தீர்ப்பை நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. முன்னதாக பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதிக்கு எதிராக ஸ்வாதி சிங்கின் கணவர் தயா சங்கர் சிங் தரக்குறைவான கருத்துக்களை தெரிவித்தார். அதனால், அவர் பாஜகவில் இருந்து நீக்கப்பட்டார். கணவரின் பதவி பறிபோன நிலையில், கடந்த 2016ம் ஆண்டு முதல் ஸ்வாதி சிங்கின் அரசியல் செல்வாக்கு அதிகரித்தது. தொடர்ந்து அவர் அமைச்சராகவும் பதவி வகித்தார். இதற்கிடையில் தம்பதிக்குள் மோதல் ஏற்பட்டதால் இருவரும் விவாகரத்து கோரியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது கணவரின் செல்வாக்கு உயர்ந்துள்ளதால் மனைவி நீதிமன்றத்தை நாடியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.